பொள்ளாச்சி, பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு பகுதியில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயி ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அரசின் அனுமதி காலம் முடிந்த நிலையிலும் சில குவாரிகள் முறைகேடாக இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி வெடிவைத்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். அதோடு இந்த குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பாதிப்பதாகவும் கனிம வளத்துறை மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு விவசாயிகள் அடிக்கடி புகார் மனுவும் அனுப்பி வருகின்றனர். சாகும் வரை உண்ணாவிரதம் இந்நிலையில் நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி நேற்று தனது போராட்டத்தை துவக்கினார். இது குறித்து முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அதிக அளவு வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கிறது. கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பெரிதும் பாதிக்கிறது. இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் மனு கொடுத்து வருகிறோம். நடவடிக்கை ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசிடமும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுத்தோம். தலைமைச் செயலர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்தோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அவர்களும் உறுதி அளித்தனர். ஆனால் இங்குள்ள மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பாதித்த நிலையில், தற்போது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கிணத்துக்கிடவு வட்டாரத்தில் உள்ள ஒட்டுமொத்த குவாரிகளையும் நிரந்தரமாக மூட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தகவல் அறிந்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முருகானந்தம் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-begins-hunger-strike-to-demand-permanent-closure-of-quarries




