சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டில் கடந்த 1970 - முதல் 1980 வரையிலான காலத்தில், கடன் நிவாரணம், மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு, கட்டுபடியான விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கையால் பெருமாநல்லூர், பெத்தநாய்க்கன்பளையம், வேடசந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 46 விவசாயிகள் உயிர் ஈகை செய்துள்ளனர். உழவர் உரிமை தினம் இவர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையில் விவசாயிகள் சங்கங்கள் ஆண்டுதோறும் ஜூலை 5 ஆம் தேதியை உழவர் உரிமை தினமாக கடைப்பிடித்து வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க மாற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாய வேலைகள், பெருமளவு இயந்திரமயமாகி, மனித உழைப்பை வெளியேற்றி வருகிறது. வேளாண் உற்பத்தி முறையில் பன்னாட்டுக் குழும நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்து, குழுமப் பண்ணைகள் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக வழிவழியாக விவசாயத் தொழிலில் வாழ்வாதாரம் பெற்று வந்த விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வெளியேற்றப்படுவதால், அவர்கள் குடும்பம், குடும்பமாக புலம் பெயர்ந்து நகரங்களில் குவிந்து வருகின்றனர். பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் விரோத மூன்று வேளாண் வணிக சட்டங்களை நிறைவேற்றியது. இந்த விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, ஒராண்டுக்கும் மேலாக உறுதி குலையாமல் போராடின. அதன் காரணமாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்ற மத்திய அரசு, விவசாயிகள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டபூர்வ அமைப்பு நிறுவப்படும் என வாக்குறுதியளித்தது. உறுதிமொழி கொடுத்து ஐந்தாண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், மத்திய அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. விவசாயிகள் ஏமாற்றம் தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் பயிர் கடன்களில் ரூ.75 ஆயிரம் வரையான கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த கடன் தள்ளுபடி முறையில் இதுவரை, நிலத்தின் அளவு அடிப்படையில் இருந்து வந்த கடன் தள்ளுபடி, தற்போது கடன் தொகை அளவை அடிப்படையாக மாற்றியுள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தச் சூழலில் நாளை 05.07.2026 தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் உழவர் தின உரிமைக்கான நிகழ்வில், கடன் சுமையில் இருந்து விவசாயிகளை விடுதலை செய்ய உறுதி ஏற்றுக் கொண்டு, செயல்படுவோம் எனக் கூறி, உழவர் தின தியாகிகளுக்கு வீர வணக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தெரிவித்துக் கொள்கிறது. கட்சி துணை நிற்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உரிமைகளை காத்திட, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் நடத்தும் இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-pledge-to-protect-the-rights-of-farmers-m-veerapandian




