மும்பை, இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. அதேவேளை, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், பொது சிவில் சட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கோவா, உத்தரகாண்ட் ஆகிய 2 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது. குஜராத், அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியுள்ளன. இந்த நிலையில், 2029-க்குள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது;- “2014-க்கு முந்தைய ஊழல், சாதிய அரசியல் மற்றும் வாரிசு அரசியல் நிறைந்த காலகட்டத்தில் இருந்து மாறி, பா.ஜ.க. தலைமையிலான அரசின் கீழ் தற்போது இந்தியா 'செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசியல்' முறைக்கு மாறியுள்ளது. 'இந்தியாவுக்கே முன்னுரிமை' (India First) என்ற கொள்கையோடு பா.ஜ.க. அரசின் அணுகுமுறை வழிநடத்தப்படுவதாலும், தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாலும், இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளன. நாங்கள் பல மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 2029-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) ஆட்சியில் உள்ள அனைத்து 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/uniform-civil-code-will-be-implemented-in-the-21-states-governed-by-the-national-democratic-alliance-by-2029-amit-shah



