சென்னை, எல் நினோ தாக்கத்தை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிட அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- எல் நினோ எனும் காரணியால் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து அவ்வப்பொழுது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிட, முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் ஆலோசனைக்குழு, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரின் தலைமையில் 28.07.2026 அன்று அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மேற்படி குழுவின் முதல்கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர், நா.முருகானந்தம் முன்னிலையில், இன்று (04.08.2026) சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை காலக்கட்டங்களான ஜூன், ஜூலை மாதங்களில், வழக்கமாக 133.75 மி.மீ. மழை பொழியும். இந்தாண்டு (2025-2026) மழைப் பொழிவு 111.19 மி.மீ. மட்டுமே பெய்து, வழக்கத்தை விட 16.68% குறைவாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சுமார் 24 மாவட்டங்களில், வழக்கத்தை விட குறைவாகவே தென்மேற்கு பருவமழைப் பொழிந்துள்ளது. இதில், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட 60% மேல் குறைவாக தென்மேற்கு பருவமழைப் பொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் கொள்ளளவும், இக்காலக்கட்டத்தில் வழக்கமாக 85% நிரம்பியிருக்கும். ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட குறைவான மழைப் பொழிவால், சுமார் 31% மட்டுமே நிரம்பி உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்திட, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட, 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் - மீனவர் நலத் துறைக்கு 10 கோடி ரூபாயும் என ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திட, முதல்-அமைச்சர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் இருந்து, முன்மொழிவுகள் வரப்பெற்று, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாவண்ணமும், அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக, கால்நடைகளுக்கு தீவனம் உடனடியாக கிடைக்கும் வண்ணமும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர், கே.எஸ். பழனிசாமி, பேரிடர் மேலாண்மை ஆணையர் அ. சிவஞானம், நிபுணர் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் எஸ். கண்மணி, முனைவர் பாலாஜி நரசிம்மன், முனைவர் அறிவுடை நம்பி அப்பாதுரை, முனைவர். ரமேஷ் ராமச்சந்திரன், முனைவர். ஆர். வெங்கடேசன், முனைவர். ஜா. க. பேட்டர்சன் எட்வர்ட், ஆர். பிரதீப் ஜான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/el-nino-precautionary-measures-first-meeting-of-expert-committee-led-by-minister




