சென்னை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தலைமையில் இன்று (04.07.2026) சென்னை, நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் சீர்மிகு நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தலைமையில் இன்று (04.07.2026) சென்னை, நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், பணி முன்னேற்றம், தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்கள், சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட கூடிய புதிய அறிவிப்புகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள், திருப்பணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தும் பணிகள், பெருந்திட்ட வரைவு பணிகள் (Master Plan) குறித்து அனைத்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எண்ணிக்கையில் பக்தர்கள் அதிக வருகைதரும் முக்கிய திருக்கோவில்களில் இணையவழியில் நுழைவுசீட்டு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். முன்பதிவு தரிசன சீட்டுகள் வழங்கப்படுவதில் மூத்தகுடி மக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை மற்றும் சிறப்பு தரிசன வழி ஏற்படுத்த வேண்டும். திருவிழாக் காலங்களில் இணையதள தரிசன முன்பதிவு சீட்டுகளை அதிகரித்து வழங்க வேண்டுமென்றும், துறையின் இணையதளத்தை அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் எளிதாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அடிப்படை வசதிகள் மேலும், தேவைப்படும் திருக்கோவில்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டுவது குறித்து முன் வரைவை தயாரித்து அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருக்கோவில்களில் காலியாக உள்ள பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த திருத்தேர்களை பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் துணை கொண்டு இயக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். பக்தர்களின் அடிப்படை தேவைகளுக்கு தனிகவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும். ஆடிமாதம் வருவதால் திருக்கோவில்களில் செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்னரே தலைமையிடத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அனைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வேண்டும், திருக்கோவில்களில் உள்ள கடைகளில் விற்கப்படும் பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல் ஆகிய விவரங்களை பட்டியலிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நிகழ்வின்போது, வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை அரசு செயலாளர் ஜெ. குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய், கூடுதல் ஆணையர்கள் முனைவர் துரை ரவிச்சந்திரன், என்.பொன்மணி, பொ.ஜெயராமன், சி.கல்யாணி, ரா.வான்மதி, எஸ். சிவகுமார், இணை ஆணையர் கோ. ஜெயப்பிரியா, துறை அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-ramesh-inspects-the-activities-of-the-hindu-religious-endowments-department




