மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் 2 நபர்களை புலி தாக்கி கொன்றதுடன் அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதர்களை வேட்டையாடி பழகிய அந்தப் புலியை ஆட்கொல்லியாக அறிவித்த வனத்துறை, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் களமிறங்கியிருக்கிறது. வயது முதிர்வு அல்லது உடலில் ஏற்படும் காயங்கள் காரணமாக காட்டில் வேட்டையாடும் திறனை இழந்து மனிதர்களைத் தின்னும் குறிப்பிட்ட அந்தப் புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய ஓவேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 130 தானியங்கி கண்காணிப்பு கேமிராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். நவீன டிரோன் கேமிராக்கள் மூலமும் தேடி வருகின்றனர். மேலும் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேகமான கூண்டுகள் உட்பட 13 கூண்டுகளை காட்டில் நிறுவியுள்ளனர். புலியைத் தேடும் பணி மயக்க மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கிகளுடன் கால்நடை மருத்துவர்கள், டைகர் டிராக்கர்ஸ் எனப்படும் கால் தடங்கள் மூலம் புலிகளின் இருப்பிடத்தைப் பின்தொடர்ந்து கண்டறியும் முதுமலை பழங்குடிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் களத்தில் உள்ளனர். இரண்டு கும்கி யானைகளையும் தேடுதல் பணிக்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த 11 நாள்களாகத் தொடரும் இந்தத் தேடுதல் பணியில் குறிப்பிட்ட அந்தப் புலியை அடையாளம் காண முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். புலியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து சுற்றிவளைக்க முடியாத சூழல் நிலவுவதால் அடுத்து யாரைவது அந்தப் புலி தாக்கினால் நிலைமை இன்னும் மோசமாகும் என்கிற அச்சத்தில் இருக்கிறது மாவட்ட நிர்வாகம். கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! - பதற்றத்தில் காவல்துறை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/environment/gudalur-man-eater-tiger-searching-operation-11th-day




