துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 3 தமிழர்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையினர் ஆதாரங்களை ஜோடிப்பதாக எழுந்துள்ள விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு கடந்த 15-ஆம் தேதி கர்நடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஷாக்யா வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக அப்பகுதியில் குடியிருக்கும் அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், டேவிட் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களிடமிருந்து தப்பித்த மகிமைதாஸ் தற்போது தலைமறைவாக இருக்கிறார். மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை காணாமல் தேடிச்சென்றவர்களை வனத்துறையினர் அநியாயமாக சுட்டுக்கொன்றதாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் கர்நாடக மாநில எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இச்சம்பவத்தை கண்டித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. வனத்துறையினரால் காட்டப்பட்ட புதிய ஆதாரங்கள் மான் வேட்டையை தடுக்க சென்றபோது தங்களை துப்பாக்கியால் சுட வந்ததால் தற்காப்புக்காக சுட்டதாகவும், அவர்களிடமிருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், 35 கிலோ மான் இறைச்சியை கைப்பற்றியதாகவும் முதலில் தெரிவித்த வனத்துறையினர், பிரச்சனை பெரிதாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உண்டானது தெரிந்தபின் மேலும் சில பொருட்ளை விசாரணை நடத்தி வரும் சாம்ராஜ் நகர் உதவி கலெக்டர் தினேஷ்குமார் மீனாவிடம் ஒப்படைத்துள்ளனர். அதில், 4 கத்திகள், 2 திருப்புலிகள், ஒரு கட்டிங பிளேயர், ஒரு டெஸ்டர், ஒரு லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன், ஒரு சாதாரண மாடல் மொபைல் போன், ஒரு துண்டு, 3 டார்ச் லைட்டுகள், 2 மீன் வலைகள், ஒரு ஜோடி ரப்பர் செருப்பு ஆகியவற்றை கைப்பற்றியதாக காட்டியுள்ளனர். அதில் ரப்பர் செருப்பு புத்தம் புதிதாக ஸ்டிக்கர் கூட கிழிக்காமல் இருப்பதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் "இவை உண்மையில்லை, சண்டை நடந்திருந்தால் செருப்பு அழுக்காகி இருக்கும், ஆனால், புத்தம் புதிதாக உள்ளது. கொல்லப்பட்ட அப்பாவிகளை பெரும் வேட்டைக்காரர்களாக காட்டுவதற்காக வனத்துறையினரால் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள்" என்கிறார்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள். இதற்கிடையே தப்பித்துச் சென்று தலைமறைவாக உள்ள மகிமைதாஸ், "குண்டடிபட்டு காயமடைந்த நான் சிகிச்சை பெற்று தற்போது தலைமறைவாக உள்ளேன். வெளியில் வர பயமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நான் வரவேண்டும் என்று வனத்துறை, காவல்துறை, அரசுத்துறையினர் என் குடும்பத்தினரிடம் கூறி வருகிறார்கள். ஆனால், எனக்கு வெளியில் வர அச்சமாக உள்ளது" என்று பேசி வெளியிட்டுள்ள வீடியோவும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வனத்துறையினர் மீது கர்நாடக காவல்துறையினர் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத நிலையில் சாம்ராஜ் நகர் உதவி கலெக்டர் தினேஷ்குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/karnataka-forest-department-framing-the-fake-evidence



