சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தனித்தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது சட்டமன்ற தேர்தலில் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டிருந்தார். இதில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி), எஸ்.ஜெயக்குமார் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி), பி.சத்தியபாமா (திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி), இசக்கி சுப்பையா(நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயகுமார்(புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி), எம்.ஆர். விஜயபாஸ்கர்(கரூர் தொகுதி) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். 7 தொகுதிகள் காலி அவர்களுடைய ராஜினா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து அவர்கள் தங்களை த.வெ.க.வில் இணைத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. இடைத்தேர்தல் ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் அங்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 5 தொகுதிகளை தவிர்த்து, மதுராந்தகம்(தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. வெல்ல வேண்டிய கட்டாயம் இந்த இரு தொகுதிகளிலும் தவெக சார்பில் ஏற்கனவே ராஜினாமா செய்த மரகதம் குமாராவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருமே களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டில் வெற்றி பெற்றால், தவெக தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிப்பதோடு, ஆட்சிக்கு இருக்கும் நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என்பதால் தவெக வியூகம் வகுத்து வருகிறது. அதேநேரத்தில், அதிமுக வெற்றி பெற்ற பெற்ற தொகுதி என்பதால், இரு தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் பின்னடைவை இது கொடுக்கும் என்பதால் அதிமுகவும் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில், உள்ளது. திமுக புறக்கணிப்பா? திமுகவை பொறுத்தவரை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் கட்சியின் செல்வாக்கை நிரூபிப்பதாக இருக்கும். அதேவேளையில் தவெக, அதிமுக, திமுக என மும்முனை போட்டி ஏற்பட்டால், வாக்குகள் பிரியும். இது தவெகவுக்கு சாதகமாக மாறிவிடக்கூடாது எனவும் கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது. எனவே, மதுராந்தகம் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக அறிவாலயம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதேநேரத்தில் இடைத்தேர்தலில் வென்று விஜய்க்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் திமுக தரப்பில் சிலர் விரும்புவதாகவும் சொல்லப்படுவதால் திமுகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-is-the-dmk-boycotting



