சென்னை, சென்னை ஆலந்தூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (ஓடிஏ) இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ள இளம் அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்து பணியில் இணைந்தனர் கடுமையான பயிற்சி இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையிலுள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் (OTA) பரமேஸ்வரன் அணிவகுப்பு மைதானத்தில் இன்று (5 செப்டம்பர் 2026) 'குறுகிய கால சேவை' (SSC) 122-வது பிரிவு மற்றும் SSC (பெண்கள்) 36-வது பிரிவு மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரியமும் கண்ணியமும் மிக்க இந்த நிகழ்வு, பயிற்சி அதிகாரிகள் மேற்கொண்ட பல மாத கால கடுமையான பயிற்சியின் நிறைவைக் குறிப்பதோடு, அவர்கள் இந்திய ராணுவத்தின் எதிர்காலத் தலைவர்களாக உருவெடுப்பதையும் பறைசாற்றியது. சர்வதேச எல்லைகளுக்கு அப்பால் கடமை மற்றும் தியாக உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மொத்தம் 313 ஆண் அதிகாரி பயிற்சி மாணவர்களும், 29 பெண் அதிகாரி பயிற்சி மாணவர்களும் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் சேவைகளில் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தனர். மேலும், சீஷெல்ஸ், தான்சானியா, உகாண்டா, ஜிம்பாப்வே, எஸ்வாட்டினி, பூட்டான் மற்றும் லெசோதோ ஆகிய நட்பு நாடுகளைச் சேர்ந்த ஏழு ஆண் மற்றும் பத்து பெண் பயிற்சி அதிகாரிகளும் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இது சர்வதேச எல்லைகளுக்கு அப்பால் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் விதமாக அமைந்தது. சிறப்பான சாதனை ராணுவ இசைக்கு ஏற்ப பயிற்சி அதிகாரி மாணவர்கள் கச்சிதமான ஒருங்கிணைப்புடன் அணிவகுத்துச் சென்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டார்; புதிதாகப் பணியில் இணைந்த அதிகாரிகளுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அணிவகுப்பைப் பார்வையிட்ட அதிகாரி, பயிற்சி மாணவர்கள் மற்றும் OTA பணியாளர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டினார். உறுதிமொழி மேலும், புதிதாகப் பணியில் இணைந்த அதிகாரிகள் 'நாட்டிற்கான தன்னலமற்ற சேவை' மற்றும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குதல் ஆகிய ராணுவத்தின் முக்கிய விழுமியங்களைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். சிறப்பான அணிவகுப்பைத் தொடர்ந்து நடைபெற்ற 'பிப்பிங்' (Pipping) விழாவில், தங்கள் தோள்களில் மின்னும் ராணுவ பிரிவுகள் மற்றும் படைவகுப்புகளின் சின்னங்களை அணிந்த புதிய அதிகாரிகள், இந்திய அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்கும், எத்தகைய சூழலிலும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில் உறுதிமொழியை ஏற்றனர். பயிற்சி நிறைவு அணிவகுப்பு இந்நிகழ்ச்சியில், பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் (Officer Cadets) பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தூதரகப் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மதிப்பாய்வு அதிகாரியாகப் பங்கேற்ற கடற்படைத் தளபதி, BUO குர்கீரத் சிங் ஹோராவுக்கு 'கவுரவ வாள்' (Sword of Honour) மற்றும் வெண்கலப் பதக்கத்தையும், AUO அபினப் சௌஹானுக்கு OTA தங்கப் பதக்கத்தையும், ACA நிகெட் சிங் தோமருக்கு வெள்ளிப் பதக்கத்தையும் வழங்கினார். சென்னை அதிகாரி பயிற்சி அகாடமியில் (OTA) நடைபெற்ற இந்தப் பயிற்சி நிறைவு அணிவகுப்பானது, இந்திய ராணுவத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் மரபுகளையும் தொடர்ந்து நிலைநிறுத்தவிருக்கும் எதிர்கால ராணுவத் தலைவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, வீரம் மற்றும் தளராத ஈடுபாடு ஆகியவற்றிற்குச் சான்றாகத் திகழ்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/army-officers-complete-training-take-oath-and-assume-duty



