Vollständiger Artikel
வேலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர்கள் என அனைவருமே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் இவர்களுக்குள், `வேலூர் தி.மு.க Vs காட்பாடி தி.மு.க’ என்ற பாகுபாடு பகையாகப் பற்றியெரிகிறது. இதனால், மாநகராட்சி மன்றக் கூட்டங்கள் நடைபெறுவது அரிதாக மாறிப்போனது. மேயர் சுஜாதா, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே கூட்டத்தைக் கூட்டி, அரை மணி நேரத்துக்குள்ளாக முடித்துவிடுவதை வழக்கமாக்கியிருக்கிறார். இந்த நிலையில்தான், ஜூன் 19-ம் தேதி மாமன்றத்தைக் கூட்டினார் மேயர் சுஜாதா. அவர்மீது காட்டமான குற்றச்சாட்டுகளை நேரடியாகச் சுமத்தி, ஒருமையில் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டார் துணை மேயர் சுனில்குமார். ``மாநகராட்சி நிர்வாகத்துல நடக்குற எல்லா சீர்கேடுகளுக்கும் மேயர்தான் காரணம். அவரால மாநகராட்சியே நாசமாப்போச்சு. எல்லாத்துக்கும் மேயர் கமிஷன் கேக்குறாங்க’’ என்றார் சுனில்குமார். மேயர் சுஜாதா இதனால் கடுப்பான மேயர் சுஜாதா, “நீங்க கூடத்தான் உங்க பினாமி பேருல காட்பாடி தொகுதிக்குள்ள 40 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துட்டு, ரோடு போடலை. இதனால மக்கள்தான் அவதிப்படுறாங்க” என்றார். இப்படியே, கூட்டம் முடியும் வரை மேயர், துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர் என சொந்தக் கட்சி பிரதிநிதிகளே மாறி மாறி ஒருவர்மீது மற்றொருவர் புழுதி வாரித் தூற்றிக்கொண்டனர். இதையடுத்து ஜூன் 23-ம் தேதி, மேயர் சுஜாதா தன்னுடைய ஆதரவு கவுன்சிலர்கள் 18 பேரை அறிவாலயத்துக்கு அழைத்துச் சென்று தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோரைச் சந்தித்தார். அப்போது, துணை மேயர் சுனில்குமார், ஒன்றாவது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்டோர்மீது புகாரளித்திருந்தார் மேயர் சுஜாதா. இந்த விவகாரம் பற்றி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, ஜூன் 29-ம் தேதியான நேற்றைய தினம், இருதரப்பினரையும் அறிவாலயம் வருமாறு அழைத்தார் ஆர்.எஸ்.பாரதி. மேயர் சுஜாதா மீண்டும் தனது ஆதரவு கவுன்சிலர்களான ஆர்.பி.ஏழுமலை உள்ளிட்டோருடன் அறிவாலயம் சென்றார். ஆர்.எஸ்.பாரதியிடம், ``துணை மேயர் சுனில்குமார் த.வெ.க செல்கிறார். அதனால்தான் மாநகராட்சியில் இப்படி பிரச்னை செய்கிறார்’’ என்று போட்டுக்கொடுத்திருக்கிறார் கவுன்சிலர் ஆர்.பி.ஏழுமலை. துணை மேயர் சுனில்குமார் துணை மேயர் சுனில்குமார், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக வலம் வருவதாலும் ஆர்.பி.ஏழுமலை சொன்னதை ஆர்.எஸ்.பாரதி நம்பவில்லை. அப்போது, ``ஏற்கெனவே ஆளும்கட்சியினர் `பார்ட்டி ஃபண்ட்’ என்று தி.மு.க-வை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில், மாநகராட்சி `கமிஷன்’ விவகாரத்தை நீங்களே பேசி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இது தொடரக் கூடாது’’ என்று எச்சரித்து, மேயரிடம் `மன்னிப்பு’ கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. இதைத்தொடர்ந்து அங்குவந்த துணை மேயர் சுனில்குமாரிடமும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி அனுப்பியிருக்கிறார். அதே சமயம், ``என் தொகுதி விவகாரம் என்பதால், யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம்’’ என்றும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனாலும், இருதரப்பும் சமரசம் ஆவதுபோலத் தெரியவில்லை. உஷ்ணமாக வேலூருக்குத் திரும்பிய நிலையில், அவரவர் `பர்சனல்’ டைரி பக்கங்களையும் வெளியில் கசியவிடத் தயாராகியிருக்கிறார்களாம். இதனால் அனலாய் தகிக்கிறது வேலூர் திமுக.! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




