சென்னை, சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் தலைமையில், குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல், பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகளை (Out-of-School Children), பள்ளியில் சேர்த்து பாதுகாத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (24.07.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை ஆணையாளர்கள் செ.சரவணன், க.கற்பகம் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். முன்கூட்டியே கண்டறிய ஆலோசனை இக்கூட்டத்தில், பெற்றோர் பராமரிப்பின்றி உள்ள குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல், குழந்தைகளின் மறுவாழ்வு ஆலோசனை சேவைகள், பாதுகாப்பு இல்லங்கள், மறுகுடியமர்வு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள் நியமித்தல், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு, பள்ளிகளுக்கு அருகிலுள்ள போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள், ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்துதல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பள்ளி இடைநிற்றலை முன்கூட்டியே கண்டறிய துறைகளுக்கிடையேயான தரவு பகிர்வு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கல்வி மற்றும் மறுவாழ்வு சேவைகளை காலதாமதமின்றி வழங்கி, பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆணையாளர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, ஆணையாளர் மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்து, சமூக நலத் திட்டங்கள் மற்றும் இரவுநேர தங்குமிடங்களின் செயல்பாடுகளை மேலும் திறம்பட செயல்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-holds-consultative-meeting-to-prevent-school-dropout-of-children



