கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு பகுதியில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, 27 வயது இளைஞர் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு மன்னார்க்காடு போலீஸார் போக்ஸோ வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கின் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டை நாடினார் மனுதாரரான இளைஞர். அதில் அச்சிறுமி தனது மனைவி என்றும், இஸ்லாமிய முறைப்படி தங்களுக்குத் திருமணம் நடந்து முடிந்துவிட்டது என்றும் இளைஞர் வாதிட்டார். மேலும், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை வரம்பிற்குள் வராது என்ற இந்திய தண்டனைச் சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது தரப்பு வாதமாக முன்வைத்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோபின் செபாஸ்டியன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கேரள உயர்நீதிமன்றம் நீதிபதி வழங்கிய உத்தரவில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டம், தனிநபர் சட்டங்களை விட மேலானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்த நீதிமன்றம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட போக்சோ சட்டம் ஒரு சிறப்புச் சட்டமாகக் கருதப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. இச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைகளாக கருதப்படுவார்கள், அவர்கள் திருமணமானவர்களா இல்லையா என்பது இங்கு முக்கியமல்ல எனவும் தெளிவுபடுத்தியது. போக்சோ சட்டம் மனைவிக்கு 15 வயது பூர்த்தியாகியிருந்தால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்ற முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் விதியை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே திருத்தியுள்ளது. 'இன்டிபென்டன்ட் தாட்' வழக்கின் தீர்ப்பின்படி இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது முதற்கட்ட விசாரணையிலேயே தெரியவருகிறது எனக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையைத் தொடரலாம் எனவும் உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/kerala-high-court-dismissed-the-case-by-a-young-man-on-pocso-case




