Full Article
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரர் பகுதியில் கடந்த வாரம் இடி, மின்னலுடன் பெய்த மழையால் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 50,000 நெல் மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன என்ற செய்தியை நாம் கடந்து வந்திருப்போம். மழையில் நனைந்த நெல் மூட்டைகள் வேதனையில் விவசாயிகளின் மனம்..! வருடம்தோறும் இப்படியான செய்தி நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. வியர்வை சிந்தி உழைத்து அறுவடை செய்த நெல் மணிகள் மழையால் வீணாகும்போது விவசாயிகளின் மனம் எவ்வளவு வேதனை அடையும். ஆனால் இதனை நாம் எப்போதும் ஒரு செய்தியாகவே கடந்துவிடுவோம். அதேபோல அரசு ஆய்வு செய்வதையும், அறிக்கை விடுவதையும் தான் வழக்கமாகக் கொண்டிருக்கும். நுகரப்படும் 116 மில்லியன் மெட்ரிக் டன்கள் இந்திய மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்புக் கழகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்டுக்குச் சுமார் 150 மில்லியன் மெட்ரிக் டன்கள் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரேஷன் திட்டங்கள் மற்றும் மக்களின் நேரடி உணவுத் தேவைக்காக ஆண்டுக்குச் சுமார் 116 மில்லியன் மெட்ரிக் டன்கள் உள்நாட்டிலேயே நுகரப்படுகின்றன. மீதமுள்ளவை ஏற்றுமதிக்கும், அவசரக் கால கையிருப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மழையில் நனைந்த நெல் மூட்டைகள் வீணாகும் 3 கோடி நெல் மூட்டைகள் இருப்பினும், அறுவடைக்குப் பிந்தைய போக்குவரத்து மற்றும் முறையான மேற்கூரையுடன் கூடிய நவீன சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால், திறந்தவெளியில் தார்பாய் போர்த்தி வைக்கப்படும் நெல் மூட்டைகளில் மழையினாலும் பூச்சிகளினாலும் மட்டுமே ஆண்டுக்குச் சுமார் 1.5 மில்லியன் மெட்ரிக் டன்கள், அதாவது தோராயமாக 3 கோடி நெல் மூட்டைகள் வீணாகின்றன என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 7 மில்லியன் மெட்ரிக் டன்கள் அரிசி உற்பத்தி இதுவே தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு வேளாண்மைத் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆண்டுக்குச் சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டன்கள் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இது 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளின் கணக்கில் தோராயமாக 14 கோடி மூட்டைகள் ஆகும். தமிழக மக்களின் நேரடித் தேவை மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கான ரேஷன் பொது விநியோகத் திட்டத்திற்காக ஆண்டுக்குச் சுமார் 8.5 முதல் 9 மில்லியன் மெட்ரிக் டன்கள் அரிசி நுகரப்படுகிறது. மழையில் நனைந்த நெல் மூட்டைகள் தமிழகத்தில் வீணாகும் 24 லட்சம் மூட்டைகள் உற்பத்தி பற்றாக்குறையை ஈடுசெய்ய ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மத்திய அரசின் FCI தொகுப்பிலிருந்து அரிசி பெறப்படுகிறது. இருப்பினும், கொள்முதல் நிலையங்களில் போதிய மேற்கூரை வசதி இல்லாததாலும், திடீர் மழையினாலும், முறையான சேமிப்பு கிடங்குகள் இல்லாததாலும் ஆண்டுக்குச் சுமார் 1.5% முதல் 2% வரை நெல் சேதமடைகிறது. இது டன்களில் கணக்கிட்டால் சுமார் 1.2 லட்சம் டன்கள், அதாவது தோராயமாக 24 லட்சம் மூட்டைகள் நெல் மழையிலும் வெயிலிலும் வீணாகிறது என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அரசின் மெத்தனப்போக்கு வருடா வருடம் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும் இந்த விஷயத்தில் அரசு மெத்தனப்போக்கு காட்டுவதற்குக் காரணம், நிரந்தர உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட முதலீடு அதிகம் என்பதால் தார்பாய்களை வாங்குவது போன்ற தற்காலிக சமாளிப்பு முறைகளையே அரசு பெரிதும் நம்பியிருப்பதுதான். மேலும், வேளாண்மைத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற துறைகளுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததும், புதிய கிடங்குகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் அதிகாரத்துவத் தாமதங்களும் இந்த அவலநிலையைத் தொடரச் செய்கின்றன. இந்த நிலையை மாற்றியமைக்க அரசு இனிமேலும் தற்காலிகத் தீர்வுகளைத் தேடாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையில் நனையும் நெல் மூட்டைகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்! ஒவ்வொரு முக்கிய கொள்முதல் நிலையங்களிலும் நவீன, காற்றோட்ட வசதியுடன் கூடிய, பூச்சிகளால் பாதிக்கப்படாத எஃகு சேமிப்புக் கிடங்குகளை நிறுவ வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வாரக்கணக்கில் தேங்கிக் கிடப்பதைத் தவிர்க்க ஆன்லைன் டோக்கன் முறையைச் சீரமைத்து, கொண்டு வரும் நெல்லை 24 மணி நேரத்திற்குள் கொள்முதல் செய்து பாதுகாப்பான இடத்திற்கு லாரிகள் மூலம் மாற்ற வேண்டும். ஒருபுறம் பசிப் பிணியைப் போக்கப் போராடும் நாம், மறுபுறம் கோடிக்கணக்கான நெல் மூட்டைகளை மழையில் அழுக விடுவது பெரும் நிர்வாகக் குறைபாடாகும். நெல் மூட்டைகள் நனைந்த பின் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, மழை வரும் முன் காக்கும் உள்கட்டமைப்புப் பணிகளில் அரசு தீவிரம் காட்டுவதே இதற்கு தீர்வாக இருக்கும்.! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



