டெல்லியில் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக நீட் முறைகேடு தொடர்பாகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக மத்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள்மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அனுமதியை மீறி கலந்துகொண்டதாக ஆயிரக்கணக்கான மாணவர்கள்மீது அனைத்து மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளை ரத்து செய்யக் கோரி வரும் 5-ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி முடிவு செய்திருந்தது. மாணவர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இம்மனுக்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பாக ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசு (டெல்லி காவல்துறை), பீகார், அசாம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் மாணவர் போராட்டங்கள் தொடர்பாகப் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரி விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும், ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை போராட்டம் தொடர்பான நிகழ்வுகள் தொடர்பாக எதிர்காலத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாது என்றும் உறுதியளித்தார். மேலும் ஜூலை 25ம் தேதி காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மதிக்கும் வகையில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேத்தா கூறினார். நீட்-யுஜி 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவாதத்தை மதிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், ஆனால் வழிமுறைகளை உருவாக்க மூன்று மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். நீதிமன்ற வாதத்தின்போது, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, இரு தரப்பினரும் நம்பிக்கையுடன் பேசினால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று கூறியது. இதற்கு மேத்தா, இரு தரப்பும் இந்த விஷயத்தை ஆக்கப்பூர்வமாகவும் நேர்மறையாகவும் அணுகியதாக பதிலளித்தார். நாங்கள் எதிரிகள் அல்ல என்றும் அவர் மேலும் கூறினார். இதையடுத்து ஜூலை 20ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர்களையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாணவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொண்ட 2,873 நபர்கள் மீது கடுமையான குற்றங்கள் இருப்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீஸாருக்கு நீதிபதிகள் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து காக்ரோச் ஜனதா கட்சியினர் வரும் 5ம் தேதி டெல்லியில் நடத்த இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் அளித்த பேட்டியில்,'' உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் நேர்மறையான பதில் மற்றும் சுப்ரீம் கோர்டின் தீர்ப்பிற்குப் பிறகு, வரும் 5 ஆம் தேதி நடத்த இருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்''என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/supreme-courts-decisive-move-cases-against-students-who-protested-at-delhis-jantar-mantar-quashed




