கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது போர் நடக்கவில்லை என்றாலும் ஈரானுக்கு எதிரான நொருளாதார நெருக்கடியை அதிகரிக்க ஈரானுக்குள் அல்லது ஈரானில் இருந்து எந்த கப்பலும் வெளியில் செல்ல முடியாதபடி அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமலும், குடும்பத்தினரைப் பார்க்க முடியாமலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். கடலில் 250 நாள்கள் குறிப்பாக ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் கடந்த 9 மாதங்களாக வளைகுடா பகுதியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது தொடர்ச்சியாக 250 நாள்கள் கரைக்கு வராமல் தொடர்ந்து கடலில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அக்கப்பலில் சுமார் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படையினர் இருக்கின்றனர். தொடர்ச்சியாக கடலில் தங்குவதும் அவர்களுக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளது. இதனால் யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் இருக்கும் மாலுமிகள் கடலில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர்கள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இதையடுத்து மாலுமிகளின் குடும்பத்தினரும் மிகவும் கவலை அடைந்துள்ளனர். சான் டியாகோவில் உள்ள ஒரு ஹாலில், சுமார் 200 குடும்ப உறுப்பினர்கள் விமானம் தாங்கி கப்பலில் அதிகரித்து வரும் நெருக்கடி குறித்து மூத்த கடற்படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பெண் கடற்படையின் செயலாளரான ஹங் காவோவிடம், தன்னுடைய கணவர் அனுப்பி இருக்கும் செய்தியில், ``நாளை நான் எழுந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டு இருப்பதாக தெரிவித்தார். ஒரு காலத்தில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்பங்களுக்கு இருந்த நம்பிக்கையை கடற்படைத் தலைமை அழித்துவிட்டதாக மற்றொரு மாலுமியின் குடும்ப உறுப்பினர் குற்றம் சாட்டினார். அன்னாபெல் லோமா என்ற பெண் இது குறித்து கூறுகையில், ``எனது கணவர் பலமுறை பணியமர்த்தப்பட்டதை அடுத்து கடலில் குதிக்க முயன்றார். அவர் சோர்வாகவும், தன்னால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயமாகவும் இருப்பதாகக் கூறினார். அவர் வேலை போய்விடுமோ என்று பயப்படுகிறார்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு மாலுமியின் மனைவி கூறுகையில், தனது கணவர் சக பணியாளர் ஒருவர் கடலில் குதிப்பதைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறினார். ஆபிரகாம் லிங்கன் கடந்த நவம்பர் 21ம் தேதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. முதலில் பசிபிக் நோக்கிச் சென்றது. ஆனால் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு, கப்பல் மத்திய கிழக்குக்கு திருப்பி விடப்பட்டது. அன்றிலிருந்து கப்பலில் இருக்கும் மாலுமிகள் குறைந்த நேரமே கரைக்கு வந்துள்ளனர். 5,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினர் இரண்டு நாள்கள் மட்டுமே தரையிறங்கியுள்ளனர். டிசம்பரில் குவாமில் ஒரு நிறுத்தமும் ஜூலையில் ஓமானில் மற்றொரு நிறுத்தமும் நிகழ்ந்துள்ளது. ஆரம்பத்தில் மே மாதத்தில் இக்கப்பலின் பணி முடிவடையும் என்று கூறப்பட்டது. மாறாக, போர் தொடர்வதால் அது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் இக்கப்பல் 5வது மாதமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கப்பல் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடைந்த கழிப்பறைகள், வாரக்கணக்கில் துணி துவைத்தல், வெந்நீர் இல்லாமை, அரை கப் அரிசி மற்றும் இரண்டு டார்ட்டிலாக்கள் என உணவு பற்றாக்குறை, சோப்பு, டியோடரன்ட் அல்லது டூத்பேஸ்ட் பற்றாக்குறையும் நிலவுகிறது என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மைக் லெவின் குறிப்பிட்டுள்ளார். இதனால் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நெருக்கடி முற்றி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/250-days-of-continuous-duty-on-a-single-ship-us-navy-sailors-attempt-suicide-by-jumping-overboard-due-to-stress




