தேவகோட்டை, தேவகோட்டை அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 18-ம் நூற்றாண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிராமத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக அக்கிராமத்தை சேர்ந்த முத்து, ஆறாவயல் பெரியய்யா ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் வேலாயுதராஜா களஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- 3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள இந்த கல்வெட்டில் மொத்தம் 5 வரிகள் காணப்படுகின்றன. திருனாகீசர் முத்துகுமாரு தேவர் பிறதோச கட்டளைக்கு நம்புகுளி என அதில் எழுதப்பட்டிருந்தது. கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு இது 18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். முத்துகுமார் தேவர் என்பவர் திருநாகேசுவரர் கோவிலுக்கு பிரதோஷ கட்டளைக்காக நம்புகுளி எனப்படும் நிலப்பகுதியை கொடையாக கொடுத்ததை தெரிவிக்கிறது. கல்வெட்டில் சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் நிலங்களை குறிக்கும் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. நிலத்தை தானமாக கொடுத்தவர் நிலக்கிழாராக இருக்க வாய்ப்புள்ளது. நாகநாதர் கோவில் மேலும் இங்கு நம்புகுளி என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி இன்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டு கிடைத்த பிரண்டவயலுக்கு அருகில் உள்ள கோட்டவயல் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கோவிலான நாகநாதர் கோவில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இக்கல்வெட்டு குறிப்பிடும் திருநாகேசுவரர் நாகநாதராக இருக்கலாம். கல்வெட்டில் குழி என்பது குளி என்றும், பிரதோஷம் என்பது பிறதோசம் எனலாம். பிரதோஷ கட்டளை என்பது தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. தஞ்சை பெரிய கோவில், பிற சோழர் கால சிவாலய கல்வெட்டுகளில் "பிரதோஷ காலத்து திரு அமுது செய்ய" (உணவு படைக்க) காசுகளும், பொன்னும் முதலீடாக வைக்கப்பட்ட விவரங்கள் விரிவாக செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களும் உள்ளூர் நிலப்பிரபுக்களும் குறிப்பிட்ட விளைநிலங்களை அல்லது முழு கிராமங்களையே கோவிலுக்கு தானமாக வழங்கினர். அந்த நிலத்தில் இருந்து வரும் நெல், வருவாய், பிரதோஷத்தன்று இறைவனுக்கு படைக்கப்படும் அமுதுபடி, சாத்துப்படி (ஆடை, ஆபரணம்) செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/18th-century-inscription-discovered-near-devakottai




