சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,ஐ.ஏ.எஸ்., வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை இன்று (16.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையாளர், மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட வி.எஸ்.மணி நகர் பகுதியில் ரூ.22.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தூர்வாரும் பணிகள் இதனைத் தொடர்ந்து, வடபெரும்பாக்கம் திருப்பதி தேவஸ்தான நகர் அருகில் உள்ள புழல் உபரிநீர் கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர் சீராக வெளியேறும் வகையில் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு கண்காணித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் ஆம்பிபியன் எஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். மாநகராட்சி ஆணையர் உத்தரவு தொடர்ந்து, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் பகுதியில் மயானம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இம்மயானத்திற்காக பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டிருந்த பணியும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த பாலம் கட்டும் பணிக்காக பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் கொட்டப்பட்டிருந்த மண் மற்றும் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அனைத்தையும் இரண்டு நாட்களுக்குள் அப்புறப்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன்,ஐ.ஏ.எஸ்., மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன், மண்டல அலுவலர் ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drainage-dredging-works-chennai-corporation-commissioner-inspects




