சென்னை, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து கல்லூரி பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்த கல்லூரி பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று (03.09.2026) ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் கிடைக்கப்பெறுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் போதுமான அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான அண்ணா ஆத்ர்ஷ் கல்லூரி, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குருநானக் கல்லூரி, லயோலா கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, இராணி மேரி கல்லூரி, மெட்ராஸ் சமூகப் பணி பள்ளி, நாம் அறக்கட்டளை, குளோபல் அட்ஜஸ்ட்மென்ட் அறக்கட்டளை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி, சிங்கப்பெண் சிறப்புப் படை, பெண் உரிமை இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை உள்ளிட்ட கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது இடங்கள், பேருந்து, இரயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், கல்லூரிகள், கால் டாக்சி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பினை ஏற்படுத்துதல், உறுதி செய்தல், இதர தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், செயற்கை நுண்ணறிவு மூலம் பெண்களை தவறாகச் சித்தரிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும், கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பிற்கென ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்து பாலின அடிப்படையிலான புகார்களுக்கு தீர்வு காணுதல், மாணவிகளுக்குள் மகளிர் மன்றம் ஏற்படுத்தி ஒரு கட்டமைப்பை உருவாக்குதல் அல்லது மாணவியர்களுக்கான குழுக்களை அமைத்து பாலினப் பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சிகளை வலுப்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகக் குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ் மற்றும் அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/coordination-meeting-regarding-womens-safety-in-chennai-held-with-college-representatives-chaired-by-the-corporation-commissioner




