அனைவருக்கும் பசுமை வணக்கம்! தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர், விவசாயிகள். ஆனால், கடும் அதிருப்தியே அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், ‘வான்மகள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 100 பெண்கள் உட்பட 500 பேருக்கு ‘டிரோன்’ இயக்குவதற்கான பயிற்சிகளும் உரிமமும் வழங்கப்படும் எனவும், பயிற்சி பெற்ற பெண்களுக்கு 50% மானியத்தில் டிரோன்கள் வழங்க ரூ.4 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைப்பதற்கு என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாகுபடி பரப்பை அதிகரிக்க ‘கரும்புச் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு, ரூ. 9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து மற்றும் தென்னை ஆகிய பயிர்களில் தொடக்கம் முதல் இறுதி வரை எந்திரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ரூ.46.37 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. விவசாயிகளோ, `இவை அனைத்தும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கமான திட்டங்கள்தான். கவர்ச்சிகரமாகப் பெயரை மாற்றி, வசீகரமான வாக்கியங்களில் புதிய அறிவிப்புகள் போல் வாசித்துள்ளது, தமிழக அரசு. இது எங்களை ஏமாற்றக்கூடிய கண்துடைப்பு பட்ஜெட்’ என ஆதங்கப்படுகிறார்கள். த.வெ.க தனது தேர்தல் அறிக்கையில், ‘நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும்’ என வாக்குறுதி அளித்திருந்தது. கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன் முழுமையாகவும், பெரு விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவிகிதமும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தது. ஆனால், பயிர்க்கடன் தள்ளுபடியில் தமிழக அரசு செய்த சூழ்ச்சி, விவசாயிகளைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, ‘வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான இனிப்பான அறிவிப்பு நிச்சயம் வெளியாகும்’ எனப் பெரும்பாலான விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய், விவசாயிகளின் காதில் பூ சுற்றாமல், ஒரு மாலையையே அணிவித்துவிட்டார். ‘பயிர்க்கடன் தள்ளுபடி, நெல், கரும்புக்கான கூடுதல் விலை, விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை’ எனக் கொதிக்கிறார்கள் விவசாயிகள். காவிரி விவகாரத்திலும் அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை. இது மாற்றத்துக்கான அரசா, விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரவந்த அரசா? - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/agriculture/government/editorial-page-august-25-2026




