திண்டுக்கல், திடக்கழிவு மேலாண்மை திட்டம்சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்றி அவற்றை மாற்று சக்தியாக மாற்றவும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடு வீடாக குப்பை சேகரிப்பு இதன்படி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் தினமும் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அப்போது, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 42 டன் இயற்கை உரம் இவ்வாறு மாநகராட்சி முழுவதும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளில், மக்கும் குப்பைகள் மட்டும் தனியாக பிரிக்கப்படுகின்றன. அவ்வாறு தினமும் சுமார் 42 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் சேருகின்றன. இந்த குப்பைகளை வீணாக்காமல், அவற்றில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 14 நுண்ணுர மையங்கள் இதற்காக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் 14 இடங்களில் நுண்ணுர செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டு, தங்கு தடையின்றி செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மக்கும் குப்பைகள் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு தயார் செய்யப்படும் உயர்தர இயற்கை உரங்கள் அனைத்தும், அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. காய்கறி கழிவுகள் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் டன் கணக்கில் காய்கறி கழிவுகள் சேருகின்றன. இதேபோல் நகரின் இதர பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் அதிக அளவில் காய்கறி கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மின்சாரம் தயாரிக்க முடிவு இந்த காய்கறி கழிவுகள் மக்கும் குப்பையாக இருப்பதால், அவற்றை வெறும் இயற்கை உரமாக மட்டும் மாற்றாமல், மாற்று எரிசக்தியாகவும் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக திண்டுக்கல் லயன் தெருவில் அதிநவீன மின்சாரம் தயாரிக்கும் மையம் ஒன்று அமைக்கப்பட்டது. மீத்தேன் தொழில்நுட்பம் இந்த மையம் தினமும் 5 டன் காய்கறி கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டு வரப்படும் காய்கறி கழிவுகள் முதலில் எந்திரம் மூலம் நன்றாக அரைக்கப்பட்டு கூழாக மாற்றப்படுகிறது. பின்னர், அந்த கூழ் ராட்சத கலனில் நிரப்பப்படுகிறது. அங்கு காய்கறி கழிவு கூழில் இருந்து இயற்கையாக உருவாகும் மீத்தேன் வாயு, குழாய் மூலம் தனியாக பிரிக்கப்படுகிறது. 120 யூனிட் மின் உற்பத்தி இவ்வாறு வெளியாகும் மீத்தேன் வாயு மற்றொரு அறையில் உள்ள ராட்சத பலூனில் சேகரிக்கப்படுகிறது. அந்த பலூன் முழுமையாக நிரம்பியதும், மீத்தேன் வாயு மூலம் இயங்கும் அதிநவீன ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மையத்தில் தற்போது தினமும் 100 யூனிட் முதல் 120 யூனிட் வரை மின்சாரம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜெனரேட்டர் குடியிருப்புகளுக்கு மின்சாரம்? இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு, காய்கறி கழிவுகளை அரைக்கும் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மையத்தில் உள்ள மின்விளக்குகளும் இதன் மூலமே எரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் தற்போதைய உற்பத்தியை விட 4 மடங்கு கூடுதலாக மின்சாரம் தயாரிக்கும் வசதி உள்ளது. இதனால், வரும் நாட்களில் உற்பத்தியை அதிகரித்து, அருகில் உள்ள நுண்ணுர செயலாக்க மையங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கும் மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/thindukkal-municipality-vegetable-waste-electricity-production




