சென்னை, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம், மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் கணினி, தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த 250 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:- திமுக தேர்தலில் பங்கேற்க தொடங்கப்பட்ட கட்சி அல்ல, சமூகத் தொண்டு, சமூக சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மக்களுக்கு செய்கின்ற சேவைதான், தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் என்றும் முக்கியமானதாக இருக்கும், சமூகத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களை மேல்நிலைக்கு கொண்டு வருவதுதான் இவர்களின் முக்கியமான நோக்கம். ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதுதான் அவர்களின் முக்கிய குறிக்கோள். கிண்டி ரேஸ் கோர்ஸில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்து திறக்க வாய்ப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன். யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி நடத்தினாலும் கொள்கைத் தலைவர்களாக பெரியாரையும் அம்பேத்கரையும் சொல்லித்தான் ஆக வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி திட்டம், நலத்திட்டம் ஆகியவற்றில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவானது மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான். அதனை தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் திட்டங்களின் பெயரை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால் திட்டங்களை மாற்றாதீர்கள். ஏனெனில் மக்கள் நலன் முக்கியம். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், திமுக வகுத்த பாதையில் செல்வதுதான் நாட்டுக்கு நல்லது. இன்னைக்கு யார் அமைச்சர்னு தெரியல. ஆனா என்னைக்கும் என் அன்புத்தம்பி மா.சுப்பிரமணியன்தான் சுகாதாரத்துறை அமைச்சர். இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நிச்சயம் அதற்கு உறுதுணையாக இருப்பேன், ஆளுங்கட்சியாக இருக்கும்போது அட்டையாக ஒட்டிக் கொள்பவன் நான் அல்ல, திமுகவின் கட்டப்பா நான் என்று கூட சொல்லி கொள்ளுங்கள். எங்களுக்கு சினிமாவில் நான்கு காசு கிடைக்கிறது என்றால், அதற்கு தமிழ்நாடு நன்றாக இருப்பதுதான் காரணம். திமுக இயக்கம், தமிழ்நாட்டிற்கு எப்போதும் காவலனாக இருக்கும். நாம வாங்கி கொடுத்த ஆட்டோவில் வேறு ஏதோ கொடி பறக்குதே என சொன்னார்கள். எவ்வளவு நாள் பறக்கிறது என்று பார்க்கலாம். அவசரப்பட்டு மாற்றம் மாற்றம் என சொல்லி ஓட்டு போட்டு விட்டோம். குழந்தைகள், நண்பா, நண்பீஸ் எல்லாம் பெரியவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-dmks-kattappa-actor-sathyaraj




