பண மோசடி வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து, கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான லலித் மோடி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வெளியானதை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய லலித் மோடி, அதன் தலைவராக இருந்தபோது, 2009 மக்களவைத் தேர்தலை காரணமாகக் கொண்டு அந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை தென் ஆப்பிரிக்காவில் நடத்தினார். இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு அன்னியச் செலாவணி பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி, லலித் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்தச் சூழலில், 2010-ம் ஆண்டு அவர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கினார். பின்னர், இந்த முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அவருக்கு ஆயுள் காலத் தடை விதித்தது. ஆதாரங்கள் இல்லை அன்னியச் செலாவணி தொடர்பான இந்த வழக்கு, கடத்தல் மற்றும் வெளிநாட்டு பண மோசடி தொடர்பான சொத்துகள் பறிமுதல் சட்டத்தின் கீழ் செயல்படும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம், அமலாக்கத் துறை விதித்திருந்த அபராதங்களை ரத்து செய்ததுடன், லலித் மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்தது. இந்தியா வருவேன் இந்தத் தீர்ப்பு குறித்து லலித் மோடி கூறுகையில், "16 ஆண்டுகளாக நான் நடத்தி வந்த சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இத்தனை ஆண்டுகளாக ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் நான் கூறியவை அனைத்தும் உண்மை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் நலனுக்காக மட்டுமே நான் செயல்பட்டேன். ஆனால், என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தற்போது இந்தியா திரும்புவதற்காக காத்திருக்கிறேன். இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ இந்தியா வருவேன்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/enforcement-directorate-penalty-quashed-lalit-modi-decides-to-return-to-india-after-16-years




