Full Article
பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், இன்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவர் ராமதாஸ் அன்புமணியைக் கட்டிப் பிடித்து கண்கலங்கியதும், அதன் பிறகு அன்புமணி உள்ளிட்டவர்கள் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோக் காட்சிகளும் வெளியானது. ராமதாஸ் - அன்புமணி அதையடுத்து அங்கிருந்து பனையூர் கிளம்பிய அன்புமணியிடம், `இரண்டு அணிகளாக இருந்த பா.ம.க ஒன்றாக இணையுமா?' என்று எழுப்பிய கேள்விக்கு, `இனி நல்லதே நடக்கும்' என்று கூறிவிட்டு நகர்ந்தார். அதன்பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பா.ம.க.வின் மூத்த தலைவர் ஜி.கே.மணி, ``இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை மருத்துவர் அன்புமணி அவர்கள் சந்தித்துப் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தச் சந்திப்பை மனதார வரவேற்கிறேன். மருத்துவர் ராமதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பா.ம.க தமிழ்நாட்டில் வலிமையான, தவிர்க்க முடியாத சக்தியாக இருந்ததை நாடு அறியும். இடையிலேயே சற்றுத் தொய்வு ஏற்பட்டது. இந்த சந்திப்பு நல்ல சந்திப்பு. குடும்பப் பாசமும், குடும்ப உறவும் மீண்டும் நிலைத்திருக்கிறது. இருவரின் சந்திப்பு இன்றைக்கு நாடு முழுவதும் பேசப்படுகிற ஒன்றாக அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பு இன்னும் கொஞ்சம் முன்பாக நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் காலம் தாழ்த்தியாவது இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசும் போது கருத்து வேறுபாடு மறைந்துபோகும். மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி இருவரும், அனைத்து நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி முடிவெடுத்தால் கட்சி வேகமாகச் செல்லும். ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி மருத்துவர் அன்புமணி அவர்கள் ஏற்கனவே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். இடையில் வருத்தமான சூழலால் பேச முடியவில்லை. இப்போது மருத்துவர் ராமதாஸ் அவர்களைப் பார்த்த பிறகு மீண்டும் பேசுவார். இது ஒரு நல்ல தொடக்கம். தற்போது கட்சியில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பொறுப்பாளர்கள் எனப் பிரிந்து இருப்பதை மறுக்கவில்லை. அவர்கள் மீண்டும் ஒன்றாகச் சேரும் போது அடிமட்டத் தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கத்தான் செய்யும். அதேசமயம், மருத்துவர் ராமதாஸ் அவர்களும், அன்புமணி அவர்களும் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து, இனி ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்று பேசினால் சரியாகிவிடும்" என்றார். பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



