புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த ஆண்டு நவம்பர் 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என உறுதி செய்த மத்திய அரசு, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதன்படி உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில், தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். கார் வெடிப்பு தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்காணிப்புக் குழு, கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி இஸ்லாமிய அரசு (Islamic State) மற்றும் அல்-கொய்தா குறித்த தனது 38-வது அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “அல்-கொய்தா சிறிய குழுக்களாக இருந்து, பின்னர் பிராந்திய பயங்கரவாத அமைப்பாக பரிணமித்துள்ளது. அதே சமயம் பெரிய அமைப்புகளுக்கு பதிலாக, சிறிய பரவலாக்கப்பட்ட குழுக்கள் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அல்-கொய்தாவின் துணை அமைப்பாக ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ செயல்படுகிறது. இந்தியாவின் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தாக்குதலில் ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ அமைப்புக்கு தொடர்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவலுக்கான ஆதாரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஐ.நா. உறுப்பு நாடுகள் வழங்கிய தகவல்கள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே தங்கள் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அமைந்திருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்காணிப்புக் குழு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/al-qaeda-affiliate-responsible-for-the-sengottai-car-bomb-blast-un-security-council-report




