ஈரோடு, ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் வந்துகொண்டு இருந்தது. ஆசனூர் வந்தபோது, சாலை யோரம் நின்றுகொண்டு இருந்த ஒரு காட்டு யானை கரும்பு பாரம் ஏற்றிய லாரியை மறித்தது. இதனால் டிரைவர் லாரியை நிறுத்திக்கொண்டார். இதையடுத்து யானை லாரியின் மீது போடப்பட்டு இருந்த தார்பாயை விலக்கிவிட்டு கரும்புகளை எடுத்து சுவைத்தது. இதைப்பார்த்த மற்ற வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். சுமார் 15 நிமிடம் யானை கரும்பை சுவைத்துவிட்டு, அதன்பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது. வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து நின்றுவிடுகின்றன. அவ்வாறு நிற்கும் யானைகள் தாள வாடியில் இருந்து ஆசனூர் வழியாக கரும்பு, காய்கறி ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் மற்றும் கோவைக்கு செல்லும் வாகனங்களை மறித்து அவற்றை தின்று நாசப்படுத்துகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்கும் யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து சென்று விரட்டவேண்டும் என்று வாகன ஓட்டிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-and-feasts-on-sugarcane




