சென்னை, மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து அடக்கி ஒடுக்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். போராடியவர்கள் கைது இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சிவகங்கை இரட்டைக் கொலை மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் வலுக்கட்டாயமாக கைது - குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய காவல்துறை, நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பழமலைநகர்–கொடிக்காடு கண்மாயில் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் உடல்களை வாங்க மறுத்துப் போராடிய உறவினர்களும், பொதுமக்களும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். மர்ம முறையில் மாணவர் உயிரிழப்பு மேலும், மதுரை மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து அடக்கி ஒடுக்கியுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற்றமடையச் செய்யும் அளவிற்கு நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதோடு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையோ, தனது முழு அதிகாரத்தையும் நீதி கேட்டு போராடும் மக்கள் மீது ஏவி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலைகள் அரங்கேறாத நாட்களே இல்லை தவெக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததிலிருந்தே கொலைச் சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தலைநகர் சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைச் சம்பவங்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்கச் செய்வதோடு, பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதோடு, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சரோ, சட்டத்தை மதிக்காமல் கொடிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கு மாறாக, அக்குற்றங்கள் நடைபெறுவதற்கான பின்னணிக் காரணங்களை எடுத்துரைப்பதும், அன்றாடம் நடைபெறும் குற்றங்களுக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல பேசிக் கொண்டிருப்பதுமே, குற்றம் செய்வோருக்கு அறவே பயமில்லாத ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிபிசிஐடி விசாரணை எனவே, சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றங்களில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/forcible-arrest-of-those-protesting-for-justice-ttv-dhinakaran-condemns-the-move




