காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பைக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுயம்பிரகாச ஈஸ்வர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரைக்குடி தாசில்தார் ராஜாவிடம் புகார் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட முள்வேலியை அந்த தனிநபர் அகற்றிவிட்டு சுத்தம் செய்வதாகவும் புகார் தெரிவித்ததையடுத்து தாசில்தார் ராஜா மற்றும் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த நபர்களை சுத்தம் செய்யக்கூடாது எனவும் எச்சரித்து, அங்கு சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட எந்திரங்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் இந்த இடத்தை போலியாக ஆவணம் தயாரித்து மோசடி செய்த அந்த நபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் காரைக்குடி போலீசில் புகார் செய்ய குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்குரிய உண்மையான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பித்து கோர்ட்டு உத்தரவை பெற்று வாருங்கள் என கூறியதையடுத்து தனிநபர் தரப்பினர் மற்றும் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:- காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே முடியரசன் சாலையில் இக்கோவிலுக்கு சொந்தமான அந்த இடம் உள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் 27 சென்ட் அளவுள்ள இந்த நிலத்தை அந்த தனிநபர் போலியான ஆவணம் தயார் செய்து, அதில் கோவில் அறங்காவலர்களை சேர்க்காமல் கடந்த 2011-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவை பெற்று பத்திரப்பதிவு செய்த பின்னர் கடந்த ஜூன் மாதம் அந்த நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் கோவில் நிலம் என்று இருந்த நிலையில், தாசில்தாரிடம் தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் இந்த கோவில் நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அனுமதியின்றி அந்த நிலத்தை யாருக்கும் கிரையம் செய்ய முடியாது. இதுகுறித்து கோர்ட்டை நாட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/karaikudi-villagers-complain-that-an-individual-has-deeded-a-temple-land-worth-rs-100-crore




