சென்னை, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களின் நேரடி சேர்க்கை தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 278 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை கால அவகாசம் 31.08.2026 உடன் நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 07.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 95% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ 20,000 முதல் மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது. எட்டாம் வகுப்பு/ பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும்போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் நேரடியாக இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுவதோடு தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ. 1000/- கூடுதலாக வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது. இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி எண் - 9499055642 whatsapp எண் - 9499055612.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/education-and-employment/direct-admission-to-industrial-training-institutes-announcement-released




