சென்னை, சென்னையில் நேற்று ஒரே நாளில் நடந்த பிளஸ்-2 மாணவர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிளஸ்-2 மாணவர் சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளி அருகே உள்ள அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் தனுஷ் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகராறு தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி கமிஷனர் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும், பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கும் யார் சீனியர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்து சாவு இந்த நிலையில் அந்த பள்ளியின் பிளஸ்-1 மாணவர், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனுஷை அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தனுஷ், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிளஸ்-1 மாணவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். நேபாள வாலிபர் அடித்து கொலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் பின்பகுதியில் இளைஞர் ஒருவர் தலை உள்பட உடல் முழுவதும் பலத்த காயங்களோடு நேற்று காலை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அண்ணாசதுக்கம் போலீசார் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நேபாளத்தை சேர்ந்த ஸ்ரீராம்சாகா(27) என்பது தெரிந்தது. இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த சன்னிசதா(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறி அவசரமாக அவர் சொந்த ஊருக்கு தப்பி ஓட முயன்றபோது அவரை பிடித்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஸ்ரீராம்சாகாவை சன்னிசதா அடித்து படுகொலை செய்தது உறுதியானது. சமாதியில் ரத்த வெள்ளத்தில் பிணம் அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பாதிரிவேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்டது சாணாபுத்தூர் கிராமம். இங்கு வசித்து வரும் கூலித்தொழிலாளி ராஜா என்பவரின் மூத்த மகன் ரஞ்சன்(18). சாணாபுத்தூர் கிராமத்தில் வீட்டின் அருகே தனியார் வயல்வெளியில் உள்ள சமாதி மீது நேற்று காலை ரஞ்சன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் புகுந்து காவலாளிகளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் பொருள் கொள்ளை வழக்கில் கைதானவர்களில் ரஞ்சனும் ஒருவர் என தெரியவந்தது. வாலிபர் வெட்டிக்கொலை இந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த காமேஷ்(22) என்பவரையும் பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ரஞ்சனும், காமேசும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு ரஞ்சன், காமேஷை மது குடிக்க அழைத்தார். இருவரும் வயல்வெளியில் சமாதி உள்ள இடத்துக்கு சென்றனர். அங்கு மது போதை தலைக்கு ஏறிய நிலையில், முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சனை, காமேஷ் சரமாரியாக வெட்டி கொன்றது தெரியவந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-chennai-three-people-including-a-class-12-student-murdered-in-a-single-day-two-arrested




