ஸ்ரீஹரிகோட்டா, ஐதராபாதை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்-1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் இன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “நடப்பு நிதியாண்டில் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இதன்படி இன்னும் 2 மாதங்களில் அடுத்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இந்த பணிகளோடு சேர்த்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கான பணிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. 'விக்ரம்-1' தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் சராசரியாக 28 வயது கொண்ட இளைஞர்கள் ஆவர். இந்த வெற்றி ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்குக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இவர்கள் வெற்றி பெறுவதை பார்க்கும்போது பள்ளியில் நமது குழந்தைகள் நன்றாக படித்து முதல் மதிப்பெண் வாங்குவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. 2020-ல் விண்வெளித் துறை சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, இந்திய விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று, நாட்டில் முதன்முறையாக ஒரு தனியார் ராக்கெட் மூலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மைல்கல் கணிசமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களிடையே வலுவான அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/plan-to-launch-7-rockets-in-the-current-financial-year-isro-chairman-narayanan



