புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் அர்ஜுனன் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகிய இருவரைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். விபத்து நடந்தது எப்படி? புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து தினசரி ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்குப் பயிலச் சென்று வருகின்றனர். வழக்கம்போல கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தில் (தடம் எண்: 8) காலை நேரத்தில் பள்ளி மாணவிகளும், பயணிகளும் அதிகளவில் ஏறினர். பேருந்து 'ரங்கம்மாள் சத்திரம்' பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றியதும் கதவு மூடப்பட்டது. ஆனால், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் சிலர், "எங்களை இறக்கி விடுங்கள்" எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 முதல் 100 மீட்டர் தூரம் மட்டுமே நகர்ந்த நிலையில், நடத்துநரின் தகவலின் பேரில் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். அப்போது நடத்துநர் "இறங்குங்கள்" எனப் பயணிகளை இறக்கிவிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, கதவின் அருகே பேலன்ஸ் இல்லாமல் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கதவு திறக்கப்பட்ட அடுத்த கணமே, நிலைதடுமாறிய மாணவிகள் சீட்டுக்கட்டு சரிவது போல ஒருவர் மீது ஒருவராகச் சரசரவென சாலையில் தூக்கி வீசப்பட்டுச் சரிந்து விழுந்தனர். காயமடைந்த மாணவிகளின் விவரம் கீழே விழுந்ததில் மாணவிகளுக்கு இடுப்பு, தொடை, நெஞ்சு மற்றும் கை, கால்களில் பலத்த அடிகாயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த 10 மாணவிகளும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "கல்விப் பயணத்திற்கு அச்சத்தை உருவாக்கும்!" - சமூக ஆர்வலர் வேதனை இச்சம்பவம் குறித்து, ரங்கம்மாள் சத்திரம் காலனி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வரும் 'எய்ட் இந்தியா' அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா கூறுகையில்: " பழங்குடி இன மக்கள் வசிக்கும் இந்தப் பகுதிப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதே எங்களுக்கு மிகப் பெரிய சவாலான வேலை. அவர்களிடம் தொடர்ந்து பேசி, கல்வியின் அவசியத்தைச் சொல்லிக் கொடுத்து, இப்போதுதாதான் அவர்கள் பள்ளிக்கூடம் பக்கம் போகவே ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு இதுபோன்ற விபத்துகள் மனதில் மிகப்பெரிய பயத்தையும் அச்சத்தையும் உருவாக்கும். எனவே, அரசு காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதிக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகளில் கதவு என்பது பாதுகாப்பிற்காகத்தான். ஆனால் அந்தப் பாதுகாப்பே கேல்விக்குறியாகி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் மாணவர்களின் பாதுகாப்பில் இன்னும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என வேதனையுடன் தெரிவித்தார். கிராம மக்கள் சாலை மறியல் & அதிகாரிகள் விசாரணை இச்சம்பவம் குறித்துத் தகவல் பரவியதும், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கல்வித்துறை அதிகாரிகள் வருவாய்க் கோட்டாட்சியர் தாசில்தார் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கும் மற்றும் சம்பவ இடத்திற்கும் நேரில் வந்து நிலைமையைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டத்தை ஏற்றியது, பாதுகாப்பற்ற முறையில் பேருந்தை இயக்கியது மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டது ஆகியவை விசாரணையில் தெரியவந்ததையடுத்து, பேருந்தின் ஓட்டுநர் (டிரைவர்) அர்ஜுனன் மற்றும் நடத்துநர் (கண்டக்டர்) மணிகண்டன் ஆகிய இருவரையும் உடனடியாகப் பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/pudukkottai-govt-bus-door-opens-suddenly-10-schoolgirls-injured-driver-conductor-suspended




