`பள்ளிக் கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைந்திருக்கும் மதுபானக் கடைகள் அங்கிருந்து உடனடியாக அகற்றப்படும்.' - தவெக அரசு பதவியேற்ற அடுத்த சில தினங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார், முதல்வர் விஜய். பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்த அறிவிப்பு. அடுத்த ஓரிரு வாரங்களில் '717 கடைகள் என இந்த வகையில் தமிழ்நாடு முழுக்க அகற்றப்பட்டுள்ளன' என ஒரு பட்டியலையும் வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம். ஆனால் தற்போதும் பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்களிலிருந்து அரசு அறிவித்த 500 மீட்டர் தூர லிமிட்டுக்குள் இருக்கும் கடைகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் இது குறித்துக் கேட்டதற்கு, ``முக்கியமான ஆலயங்கள், பள்ளிகளின் அருகே இருக்கும் கடைகள் ஓரளவு அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் இன்னும் சில இடங்களில் பள்ளி, கோயில்களின் அருகே கடைகள் இருக்கவே செய்கின்றன. இன்னும் கடைகள் அகற்றப்பட வேண்டுமா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்" என பதில் தருகின்றனர். lakshmi amman temple இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் தொகுதியான சென்னை பெரம்பூரிலேயே பிரசித்தி பெற்ற ஓர் ஆலயத்தின் முன் இருக்கும் டாஸ்மாக் கடை சமீபத்தில் அகற்றப்பட்ட 717 கடைகளின் பட்டியலில் இடம் பெறாமல் இன்னும் அதே இடத்தில் இயங்கி வருவது, அந்தப் பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. மூலக்கடையிலிருந்து பெரம்பூர் ரயில் நிலையம் செல்லும் வழியிலிருக்கிற லட்சுமியம்மன் ஆலயம்தான் அது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கோயில், இந்தப் பகுதியில் வெகு பிரசித்தம் பெற்றது என்கிறார்கள். வருடா வருடம் ஆடி மாதம் இந்தக் கோயிலில் நடக்கும் தீமிதி திருவிழா இந்தப் பகுதி மக்களிடையே பெரிய ஆன்மிக விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுக்கவே பக்தர்கள் திரளாக இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இரண்டாவது வாரம் கூழ் வார்த்தலில் தொடங்கி நான்காவது வாரம் தீமிதி திருவிழாவுடன் நிகழ்ச்சி நிறைவடையும். இந்த வருடமும் தீமிதி திருவிழாவுக்குத் தயாராகி வருகின்றனர் பக்தர்கள். இந்தப் பின்னணியில் இந்தக் கோயிலின் நேர் எதிரே சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே இயங்கி வருகிற டாஸ்மாக்கின் கடை எண் 292 தொடர்ந்து அதே இடத்தில் இயங்கி வருவது, பகுதி மக்கல் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேற்படி கடையின் முகவரியே எண் 31, லட்சுமி அம்மன் கோயில் தெரு என்பதுதான். கடை தொடர்ந்து இயங்கி வருவது குறித்து அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் வியாபாரியிடம் பேசினோம். பெரம்பூர் ``நாங்களும் இந்தக் கடையை எடுத்திடுவாங்கனுதான் ரொம்பவே நம்பினோம். ஆனா இப்பவரைக்கும் இங்கயேதான் இருக்கு. காலையில கடை திறந்துடக் கூடாது. கும்பலா வந்திடுவாங்க. ராத்திரி கடை மூடுகிற வரைக்கும் வந்து குடிச்சிட்டேதான் இருப்பாங்க. சமயத்துல என் கடைக்கு வர்ற கஸ்டமர்கள்கூட அந்தக் கூட்டத்தைப் பார்த்துட்டு வராம போயிடுவாங்க. கோயில் பக்கத்துல இருக்கிற கடைகள் எடுக்கப்பட்ட நிலையில, பெரம்பூர்ல முக்கியமான கோயில் எதிரே இருக்கிற இந்தக் கடை மட்டும் தப்பிச்சது மர்மமாத்தான் இருக்கு. கடையை எடுக்கிறாங்களானு கொஞ்ச நாள் பார்க்கணும். இல்லாட்டி நான் வேற இடம் பார்த்துடலாமானு யோச்சிட்டிருக்கேன்'' என்றார் அவர். ''சில அதிகாரிகளோட விஷமத்தனமான வேலைங்க இது. முக்கியமான கோயில்களுக்க்குப் பக்கத்துல இருக்குற கடைகளின் பட்டியல் தயார் பண்ண அரசு சொன்னாலும், டார்கெட் காட்டணும்னு அதிக வருமானம் வருகிற கடைகள்னா அது கோயில், பள்ளிக்கூடம் பக்கத்துல இருந்தாலும் பரவால்லனு லிஸ்ட் எடுக்காம விட்டிருக்காங்க. ஆனா பெரிய கோயில்கள், அதிகளவுல பக்தர்கள் வந்து போகிற ஆலயங்களுக்குப் பக்கத்துலயும் கடை தொடர்ந்து இயங்கும்னா, அது அதிகாரிகளுடைய அலட்சியமான நடவடிக்கைனுதான் சொல்லணும். இந்த மாதிரியான அதிகாரிகள் அரசை ஏமாத்தலை. மக்கள்கிட்ட அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்கித் தர்றாங்க. CM Vijay இந்தக் கடை மட்டுமல்ல. இன்னும் இதே தொகுதியில் வர்ற கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் ரொம்ப முக்கியமான இடம். அதன் எதிரேயும் ஒரு சர்ச்சை ஒட்டி டாஸ்மாக் இயங்கிட்டிருக்கு. பெரம்பூர் தன்னுடைய சொந்த தொகுதிங்கிறதால் முதல்வர், உடனடியா கவனம் செலுத்தி இந்தக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கணும்" என்றனர், லட்சுமி அம்மன் கோயில் தெருவாசிகள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/some-more-tasmac-shops-near-temples-in-cms-perambur-constituency-were-still-functioning




