மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள வடகரை கண்மாய் சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயைச் சுற்றியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இது முக்கியமான பாசன நீராதாரமாக விளங்கி வருகிறது. மழைக்காலங்களில் கண்மாயில் சேகரிக்கப்படும் தண்ணீரை நம்பி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், வறட்சி காலங்களிலும் கண்மாயின் மேற்பகுதிகளில் வெள்ளரி, பாகற்காய், கீரை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வடகரை கண்மாயில் தற்போது வண்டல் மண் மற்றும் கிராவல் மண் அள்ளப்படுவது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கண்மாய்களில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களது விளைநிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்காக எடுத்துச் செல்ல அரசு சார்பில் குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்படும் இந்த வாய்ப்பை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயப் பயன்பாட்டுக்காக அனுமதி பெற்றுவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கண்மாயிலிருந்து மண் அள்ளப்படுவதாகவும், அவ்வாறு எடுக்கப்படும் மண் முழுவதும் விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தப்படாமல், தனியார் கட்டடப் பணிகள் மற்றும் வீடுகள் கட்டுவதற்காக வெளிநபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மண் அள்ளல் விவசாயிகளுக்காக இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண் உண்மையான விவசாயிகளுக்குச் சென்றடையாமல் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டால், அதன் பாதிப்பு நேரடியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில்தான் பிரதிபலிக்கும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். தங்களது நிலங்களுக்குத் தேவையான மண்ணைப் பெற முடியாத நிலையில், அதே மண் பணம் கொடுப்பவர்களின் கட்டடப் பணிகளுக்குச் செல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, விவசாயிகளின் பெயரில் அனுமதி பெறப்பட்டு, மண் வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மண் அள்ளும் நடவடிக்கைகளில் சிலர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக விசாரிக்கப்பட்டு உண்மை நிலை கண்டறியப்பட வேண்டியவை. அரசியல் அல்லது தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என்பதையும் வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மண் அள்ளல் இந்த விவகாரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ‘அனுமதிக்கப்பட்ட அளவு எவ்வளவு. உண்மையில் கண்மாயிலிருந்து அள்ளப்படும் மண் எவ்வளவு?’ என்பதுதான். மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றவர்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு அளவு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எத்தனை வாகனங்கள் மூலம் மண் எடுத்துச் செல்லப்படுகிறது, அந்த மண் உண்மையில் விவசாய நிலங்களுக்குத்தான் கொண்டு செல்லப்படுகிறதா அல்லது வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. மண் எடுத்துச் செல்லும் வாகனங்களின் ஆவணங்கள், அனுமதி விவரங்கள் மற்றும் எடுத்துச் செல்லப்படும் மண்ணின் அளவு ஆகியவை முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல், கண்மாயில் இருந்து அதிகளவில் மண் அகற்றப்படுவதால் அதன் இயற்கையான அமைப்பு மற்றும் நீர்த்தேக்கத் திறன் பாதிக்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு வண்டல் மண் அகற்றப்படுவது நீர்நிலையைப் பராமரிக்க உதவக்கூடியதாக இருந்தாலும், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கட்டுப்பாடின்றி மண் அள்ளப்பட்டால், கண்மாயின் இயற்கையான அமைப்பிலும் நீர்த்தேக்கத் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக சம்பந்தப்பட்ட துறையினர் தொழில்நுட்ப ரீதியான ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மண் அள்ளல் மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும், வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால், மனுக்கள் பெறப்படுவதோடு நடவடிக்கை முடங்கிவிடாமல், அதிகாரிகள் நேரடியாகக் கண்மாய்க்குச் சென்று கள ஆய்வு நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகளுக்காக வழங்கப்படும் வண்டல் மண் உண்மையான விவசாயிகளின் பயன்பாட்டுக்குத்தான் செல்கிறதா அல்லது அதன் பெயரில் இயற்கை வளம் வணிகமாக்கப்படுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக இருக்கும் கண்மாய், மறுபுறம் விவசாயிகளின் பெயரில் மண் அள்ளப்படுவதாக எழும் புகார் என வடகரை கண்மாய் விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், கண்மாயின் இயற்கை அமைப்பையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து கள ஆய்வு மேற்கொண்டு, புகார்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/illegal-sand-mining-continues-at-the-700-acre-irrigation-tank-farmers-complain-will-officials-take-action




