சென்னை, திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பழனி முருகன் திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. பழனி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோவிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோவில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது. எனவே, தமிழகத்தில் திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-case-investigation-should-be-handed-over-to-cbi-ttv-dhinakaran




