திருவண்ணாமலை, திருவண்ணாமலையை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (42 வயது). அரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிந்து (38 வயது). இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். சந்திரகுமாருக்கு நுரையீரல் தொற்றுநோய் இருந்துள்ளது. இதனால் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் இருவரும் தனிமையில் அமர்ந்து பேசியபோது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரெயில் நிலையத்துக்கு சந்திரகுமாரும், சிந்துவும் வந்தனர். அப்போது இருவரும் திடீரென நஸ்ராபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்தனர். இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த, ரெயில்வே போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டனர். அப்போது சந்திரகுமாரின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் நீண்ட நாட்களாக சந்திரகுமாருக்கு நுரையீரல் தொற்றுநோய் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக கடன் அதிகரிக்கும் என்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-commits-suicide-by-jumping-in-front-of-train-leaving-a-note-behind




