திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவில், முருகப்பெருமானின் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா மிகுந்த பக்தி பரவசத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது. சிறப்பு அபிஷேகம் விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வைர ஆபரணங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா. அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அலங்காரத்தை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். காவடி எடுத்து, அலகு குத்தி வந்த பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி, பால்குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்திருந்தனர். அரோகரா. அரோகரா. பக்தி கோஷத்தால் பரவசம் மலைக்கோவில் முழுவதும் பக்தர்களின் அரோகரா. அரோகரா. என்ற பக்தி கோஷம் எதிரொலித்ததால் பக்தி பரவசமான சூழல் நிலவியது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ வசதி, அன்னதானம், ஓய்விடம் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. கண்காணிப்பு பணிகள் தீவிரம் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மலைப்பாதை மற்றும் கோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. ஆடி கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் தொடர்ந்து அதிகளவில் வருகை புரிந்து வருவதால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-krithigai-festival-at-tiruttani-subramaniasamy-temple-devotees-offer-kavadi-and-have-darshan-of-the-lord




