புதுடெல்லி, இன்று காலை ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற எம்டி எல் பஹியாக் என்ற கப்பலை ஈரான் ராணுவம் தாக்கியதில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார். மீண்டும் மோதல் மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் துவங்கி உள்ளது. இதனையடுத்து ஹார்முஸ் நீரிணியை ஈரான் மீண்டும் மூடி உள்ளது. இதனிடையே, அந்தவழியாக சென்ற எம்டி எல் பஹியாக் மற்றும் எம்டி மோம்பஸா ஆகிய கப்பல்கள் மீது ஈரான் படையினர் தாக்குதல் நடத்தினர். அதில் இருந்த இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார். இரு கப்பல்களிலும் இருந்த 30 இந்திய மாலுமிகளில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மத்திய அரசு கண்டனம் இந்தநிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை, டெல்லியில் உள்ள ஈரானின் துணைத்தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. நேரில் வந்த அவரிடம், இந்தியாவின் வலிமையான கண்டனத்தை தெரிவித்தோம். கடல் பணியாளர்களை குறிவைக்கும் வகையிலும், ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழி வழியாக தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறோம். இந்தியர்களின் பாதுகாப்பை ஈரான் உறுதி செய்ய வேண்டும். மோதல் தீவிரம் மேற்காசியாவில் தாக்குதல் மீண்டும் துவங்கி உள்ளதும், மோதல் தீவிரம் அடைந்துள்ளதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உறுதி செய்யும் வகையில், வன்முறையை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/indias-strong-message-to-iran-after-sailors-death-in-hormuz-ship-strike




