சென்னை, ‘கல்வி இன்று கோயிலாக இல்லை. கடையாக மாறிவிட்டது’ என்ற தலைப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு நடுத்தர குடும்பங்களின் கனவாக இருந்தது. இன்று அது அதிக கட்டணம் வசூலிக்கும் வணிகமாக மாறிவிட்டது. லாபம் கிடைக்கும் வரை மாணவர் சேர்க்கை; லாபம் குறைந்தவுடன் கல்லூரிகளுக்கு பூட்டு. இதுதானா புதிய இந்தியாவின் கல்விக் கொள்கை? கல்வி ஆர்எஸ்எஸ் சிந்தனையால் வழிநடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சகம், கல்வியை ஒரு அடிப்படை உரிமையாகப் பார்க்காமல், சந்தைப் பொருளாக மாற்றிவிட்டது. புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து பெரிய விளம்பரங்கள் செய்தாலும், அதன் மத்தியில் உயர்கல்வியின் அடிப்படை பிரச்சினைகள்- கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, தரமான அரசு முதலீட்டின் குறைவு, கல்வி நிறுவனங்களின் வணிகமயமாக்கல்- தீர்க்கப்படவில்லை. இதன் விளைவு என்ன? கல்லூரிகள் மூடல் நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் படிப்பை விட கல்விக் கடனைப் பற்றி கவலைப்படுகிறார்கள். பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அலைகிறார்கள். கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்பை விட வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. கல்வியை சந்தையின் கைகளில் ஒப்படைத்தால், மாணவர்கள் வாடிக்கையாளர்களாகவும், கல்லூரிகள் கடைகளாகவும் மாறிவிடும். அப்போது லாபம் இல்லாத கடைகள் மூடப்படுவது போல, கல்லூரிகளும் மூடப்படும். கல்வி விற்கப்படும் பொருள் அல்ல. அது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். கல்வியை வணிகமயமாக்கும் கொள்கைகளிலிருந்து விலகி, அனைவருக்கும் தரமான, மலிவான, சமத்துவமான உயர்கல்வியை உறுதி செய்வதே அரசின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/education-today-is-not-a-temple-it-has-become-a-shop-manickam-tagore




