கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையை சேர்ந்த மூதாட்டியின் ஆவணங்களை பயன்படுத்தி ரூ.2 கோடியே 53 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. சேமிப்பு கணக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது71). இவரது மகன் ராமகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. லட்சுமி ஊத்தங்கரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையிலும், ராமகிருஷ்ணன் மற்றொரு வங்கி கிளையிலும் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க சென்று உள்ளார். ரூ.2.53 கோடி மோசடி அப்போது அவரது வங்கி கணக்கு வணிக வரித்துறையினரால் முடக்கப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக வங்கியில் விசாரித்த போது, ஆம்பூர் வணிக வரி மதிப்பீட்டு வட்டத்தின் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவில் லட்சுமியின் பெயரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 2018-19-ம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. வரி நிலுவை தொகையாக ரூ.2 கோடியே 53 லட்சத்து 23 ஆயிரத்து 676 செலுத்த வேண்டி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போலியாக ஜி.எஸ்.டி. பதிவு இதையடுத்து மூதாட்டி லட்சுமி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், வணிக வரித்துறை குறிப்பிட்ட நிறுவனத்திற்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எங்களது ஆதார் மற்றும் பான்கார்டு ஆகிய ஆவண நகல்களை தவறாக பயன்படுத்தி, போலியாக ஜி.எஸ்.டி. பதிவு பெற்று ரூ.2.53 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்து மோசடி செய்து உள்ளனர். மேலும் எனது மகன் ராமகிருஷ்ணனின் வங்கி கணக்கும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை செலுத்த வேண்டும் என முடக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் முடக்கப்பட்ட எங்களது வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-of-253-crore-incurred-using-aadhaar-and-pan-card-71-year-old-woman-shocked




