உடுமலை, ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணியை நிறுத்தினர். திருமூர்த்தி அணை உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பாலாற்றை தடுத்து திருமூர்த்தி அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன. இந்த அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வண்டல் மண் எடுக்க அனுமதி இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி, அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் அள்ளிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கடந்த 27-ந் தேதியில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணி தொடங்கியது. ஆனால் ஒரு சிலர் விவசாயிகள், போர்வையில் வண்டல் மண்ணை எடுத்து சென்று விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மண் அள்ளுவது நிறுத்தம் இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’யில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் திருமூர்த்தி அணைக்கு சென்று, மண் அள்ளிக்கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்தனர். இதையடுத்து முறைகேடாக வண்டல்மண் எடுத்து செல்வது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வண்டல் மண் அள்ளுவதை நிறுத்தி வைத்தனர். ஆனாலும் இதுவரையிலும் எடுக்கப்பட்ட வண்டல் மண் விற்பனைக்கு எங்கு கொண்டு செல்லப்பட்டது?அது எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது? யார் யாருக்கு விற்பனை செய்தனர்?என்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/silt-removal-work-at-thirumurthy-dam-halted-officials-take-action




