சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்ஜித் சிங் (வயது 50). இவர் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன் தினம் அதிகாலை அம்ரித்சரின் கேட் ஹகிமா பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார். போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை அப்போது, துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இருவர் போலீஸ் அதிகாரி ஹர்ஜித் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஹர்ஜித் சிங்கை மீட்ட சக போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஹர்ஜித் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வந்தனர். குற்றவாளி சுட்டுக்கொலை இந்நிலையில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் இன்று என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். கொலையாளிகள் இருவரும் அம்ரித்சரின் மவுசங் பகுதியில் பைக்கில் செல்வதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பைக்கில் சென்ற இருவரையும் போலீசார் விரட்டிச்சென்றனர். அப்போது, குற்றவாளிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் குற்றவாளிகளில் தீபக் சிங் என்பவர் உயிரிழந்தார். மற்றொரு குற்றாவாளி தப்பியோடினார். இதையடுத்து, மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும், இந்த கொலையில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/punjab-man-who-shot-dead-police-officer-killed-in-encounter




