பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லும் நேபாள மக்களின் போராட்டம், பாலம் போன இடத்தில் உயிர்நாடியான ஜிப்லைன்! நேபாளத்தின் தேவிகாட்டில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம், அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. சீற்றத்துடன் பாய்ந்த திரிசூலி ஆறு, வீடுகளையும் பாலங்களையும் அடித்துச் சென்ற நிலையில், ஆற்றின் இரு கரைகளும் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் தேவிகாட்டின் இரு பகுதிகளையும் இணைத்த பாலம் இருந்த இடத்தில் தற்போது எஞ்சியிருப்பது இடிபாடுகளும் இரும்புக் கம்பிகளும் மட்டுமே. மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக ஆற்றைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு தற்போது ஒரே நம்பிக்கையாக இருப்பது 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மட்டுமே. வெள்ளத்தில் சேதமடைந்த ஒரு வீட்டின் எஞ்சிய இரும்புக் கம்பியில் ஜிப்லைனின் ஒரு முனையும், மறுபுறம் உயிர் தப்பிய ஆலமரத்தில் மற்றொரு முனையும் கட்டப்பட்டுள்ளது. இந்த மெல்லிய கம்பிவடமே தற்போது இரு கரைகளையும் இணைக்கும் உயிர்நாடியாக மாறியுள்ளது. குழந்தைகள் உட்பட குடும்பங்கள் இந்த ஜிப்லைனைப் பயன்படுத்தி ஆற்றைக் கடக்கின்றனர். உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி தங்களது உடைமைகளையும் மறுகரைக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆபத்தான பயணமாக இருந்தாலும், “வேறு வழியில்லை” என்பதே பதிலாக உள்ளது. ஜிப்லைனை இயக்க உள்ளூர் தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர்,மக்கள் பாதுகாப்பாகக் கடக்கவும் பொருட்களை எடுத்துச் செல்லவும் உதவுகின்றனர். இதற்கிடையில், நேபாள ராணுவம் இரு கரைகளையும் மீண்டும் இணைக்க புதிய பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலம் தயாராகும் வரை, வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட வாழ்க்கைகளுக்கு இந்த ஜிப்லைன்தான் ஒரே இணைப்பு நேபாள வெள்ளம்: நீர்மின் சுரங்கத்துக்குள் 9 நாட்கள். உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/environment/disasters/bridges-washed-away-zipline-keeps-nepals-devighat-connected




