சென்னை, சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி ஆடி மாதத்தை முன்னிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் சுதர்சனின் பார்வை தனது பக்கத்து வீட்டில் இருந்த நமீதா என்ற இளம்பெண் மீது விழுந்துள்ளது. அந்த பெண்ணுடன் சுதர்சன் பேச ஆரம்பித்துள்ளார். இளம்பெண் நமீதாவை சுதர்சனுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நேரடியாக நமீதாவிடம், ‘உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னை கல்யாணம் செய்துகொள். நான் உன்னை நன்றாக வைத்து பார்த்துக் கொள்வேன்’ என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இது குறித்து நமீதா உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சுதர்சன் பேசியதை தனது செல்போனில் நமீதா ரகசியமாக ரெக்கார்டு செய்து வைத்துள்ளார். பின்னர் தனது ஆண் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சுதர்சனை சந்தித்த நமீதா, அந்த ஆடியோ பதிவை போட்டுக்காட்டி, ‘என்னிடம் எப்படி இந்த மாதிரியெல்லாம் நீ பேசலாம்? என் காலில் விழுந்து மன்னிப்பு கேள்’ என்று அடித்து மிரட்டியுள்ளார். இதையடுத்து சுதர்சனும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் நமீதாவும், அவரது ஆண் நண்பரும் இந்த விஷயத்தை இத்துடன் விடாமல், சுதர்சனிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தில் அவரது தோழிகளான வழக்கறிஞர் மோனிஷா, கேரளாவை சேர்ந்த சிவரஞ்சனி மற்றும் ஒரு ஆண் நண்பர் ஆகிய 3 பேரை அவர்கள் சேர்த்துக் கொண்டனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு சுதர்சனை மிரட்டி அவரை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்துள்ளனர். சுதர்சன் அந்த இடத்திற்கு சென்றபோது, அவரிடம் ஆடியோ பதிவை போட்டுக்காட்டி, ‘எங்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆடியோவை உனது மனைவிக்கு அனுப்பி விடுவோம்’ என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு சுதர்சன் சம்மதிக்காத நிலையில், அவரை கட்டி வைத்து, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்களை வைத்து அடித்து துன்புறுத்த தொடங்கினர். மேலும் சிகரெட்டால் அவரது உடலில் சூடு வைத்துள்ளனர். அவர்களின் சித்ரவதை தாங்காமல், பணம் தருகிறேன் என்று சுதர்சன் ஒப்புக்கொண்டதையடுத்து அவரை அவர்கள் விடுவித்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த சுதர்சன், வேறு வழியின்றி நடந்த அத்தனை விஷயங்களையும் தனது மனைவியிடம் கூறிவிட்டார். அவரது மனைவி முதலில் கோபமடைந்தாலும், தன் கணவரின் நிலையை புரிந்து கொண்டு உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார். இதன்படி இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று இளம்பெண் நமீதா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நமீதா, மோனிஷா, சிவரஞ்சனி, கணேஷ் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆடி மாதத்தில் மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில், வேறொரு பெண் மீது ஏற்பட்ட ஆசை காரணமாக இளைஞர் நிம்மதியை தொலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-sent-a-message-to-the-woman-next-door-after-his-wife-left-town-during-the-month-of-aadi-uncontrollable-desire-cost-him-his-peace-of-mind




