கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிரபலமான மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அங்கமாலி, சக்குவீடு பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ்டன் (23) என்பவர் தாவரவியல் பிரிவில் படித்துவந்தார். கடந்த 2024-ம் ஆண்டு கல்லூரியிலிருந்து படிப்பை முடித்து வெளியேறினார். எர்ணாகுளம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள கல்லூரியின் நிர்வாகத்துக்குட்பட்ட 'ராமவர்மா ஆண்கள் விடுதியில்' தங்கிப் படித்துள்ளார். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுக்கு மேல், கல்லூரி விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள 8 இரும்புக் கட்டில்களைத் திருட முயன்றுள்ளார். இதற்காக, 'போர்ட்டர்' ஆன்லைன் செயலி மூலம் ஒரு சிறிய சரக்கு வாகனத்தையும் அவர் வரவழைத்துள்ளார். ஐந்து கட்டில்களை பாகங்களாகக் கழற்றி வாகனத்தில் ஏற்றியுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த இரவுக்காவலர் சுதேவ் என்பவர் சுதாரித்துகொண்டு, மாணவரைத் தடுத்து நிறுத்தினார். கட்டிலை எங்கே கொண்டுசெல்கிறீர்கள் எனக் காவலர் கேட்டதற்கு, விடுதியில் மூட்டைப்பூச்சித் தொல்லை அதிகமாக இருப்பதால், கட்டில்களைப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக அங்கமாலிக்குக் கொண்டு செல்கிறேன் என்று ஆன்ஸ்டன் கூறியுள்ளார். சந்தேகமடைந்த காவலர் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி கடிதத்தைக் காண்பிக்கும்படி கேட்டார். அதற்கு ஆன்ஸ்டன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்த விடுதி காவலர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற சென்ட்ரல் போலீசார், ஆன்ஸ்டனைக் கைது செய்ததுடன், கட்டில்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஆன்ஸ்டன் முதற்கட்ட விசாரணையில் ஆன்ஸ்டன் கூறிய சில தகவல்கள் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை "எனது குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது. எனவே, எனது பெற்றோர் வீட்டின் மேல்மாடியை விடுதியாக மாற்றி மாணவர்களுக்கு வாடகைக்கு விட முடிவுசெய்தனர். விடுதிக்குத் தேவையான கட்டில்களை வாங்குவதற்காக பெற்றோர் என்னிடம் 17,000 ரூபாய் வழங்கினர். அந்தப் பணத்தை வேறு தேவைகளுக்குச் செலவு செய்துவிட்டேன். பணத்தைச் செலவுசெய்த விஷயம் பெற்றோருக்குத் தெரிந்தால் திட்டிவிடுவார்கள் என்ற பயத்தில், நான் ஏற்கனவே தங்கியிருந்த கல்லூரி விடுதியிலேயே நள்ளிரவில் கட்டில்களைத் திருட திட்டமிட்டேன். விடுதி காவலரால் சிக்கிக்கொண்டேன்" என விசாரணையில் ஆன்ஸ்டன் தெரிவித்துள்ளார். கல்லூரி விடுதியில் கட்டில் திருட்டு நடந்த சம்பவம் குறித்து இரவுக் காவலர் சுதேவ் கூறுகையில், "நள்ளிரவில் கட்டில்களை வாகனத்தில் ஏற்றியபோதே எனக்குச் சந்தேகம் வந்தது. கல்லூரி அனுமதி கடிதம் கேட்டபோது அவரிடம் பதில் இல்லை. உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தேன்" என்றார். இந்தத் திருட்டுச் சம்பவத்தில் விடுதியில் உள்ள தற்போதைய மாணவர்கள் அல்லது ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், திருடுவதற்கு முன்பாக ஆன்ஸ்டன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நண்பர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் படித்த சமயத்தில் எம்.ஜி. பல்கலைக்கழகத்தின் டெக்கத்லான் தடகளப் பிரிவின் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் ஆன்ஸ்டன். விளையாட்டில் சிறந்து விளங்கிய ஒரு இளம் சாம்பியன், தவறான பாதையில் சென்று திருட்டு வழக்கில் சிக்கியிருப்பது அந்தக் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/former-student-steals-cots-from-college-hostelcaught-red-handed-by-police




