சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மு.சாய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழக முதல்-அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் - தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக "தமிழ்த்தாய் வாழ்த்து" கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண். 531 நாள்: 12.08.2026 பராபவ வருடம், ஆடி - 27. திருவள்ளுவர் ஆண்டு 2057. படிக்கப்பட்டது:- 1. அரசாணை (நிலை) எண்.1393, பொது (அரசியல்)த் துறை, நாள் 17.06.1970. 2. குறிப்பாணை எண்.6678/71-6, பொது (அரசியல்)த் துறை, நாள் 05.05.1972. 3. அரசாணை (நிலை) எண்.1037, பொது (அரசியல்)த் துறை, நாள் 17.12.2021. 4. மத்திய அரசின் உள்துறை அமைச்சக கடித எண் 14/2/2025, 09.07.2026. 5. நேர்முகக் கடித எண். 7204/2026, சமபேசெ (சமுவ-1), நாள் 10.08.2026. ஆணை மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், பிரார்த்தனைப் பாடல்கள் பாடுவதில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக எந்தவொரு மதத்தினருக்கோ பிரிவினருக்கோ தொடர்பு இல்லாத ஒரு பாடலை பிரார்த்தனைப் பாடலாக வைக்கவேண்டும் என்பதால், திரு. சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய "மனோன்மணீயம்" என்ற நூலிலிருந்து ஆறு வரிகள் கொண்ட பாடலினை எடுத்து பிரார்த்தனைப் பாடலாக வைக்கலாம் என ஆணை வெளியிட்டுள்ளது. 2. அதனைத் தொடர்ந்து, மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது. 3. இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியிட்ட கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. இந்நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 10.08.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக கீழ்க்காணும் தனித்தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது:- “தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட "மனோன்மணீயம்" என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட "தமிழ்த்தாய் வாழ்த்து" 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2021 டிசம்பர் 17 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியிட்ட கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்" முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, "தமிழ்த்தாய் வாழ்த்து" தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது." 5. அதனைத் தொடர்ந்து, மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலக செயலாளரிடமிருந்து பெறப்பட்ட நேர்முக கடிதத்தில், மேற்காணும் தீர்மானத்தின் நகலினை உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பியுள்ளார். 6. எனவே, முதல்-அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தினை ஏற்று, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன், மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக "தமிழ்த்தாய் வாழ்த்து" கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-must-be-sung-first-government-order-issued




