சென்னை, உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- ஆதரவற்றோர், ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! 35 கிலோ உணவு தானியம் மத்திய பா.ஜ.க. அரசு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் செயல்படும் அந்தியோதயா அன்னயோஜனா (AAY) திட்ட பயனாளிகளுக்கு தற்போது வழங்கி வரும் 'குடும்பத்திற்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை' என்ற நடைமுறையை மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, இனி நபர் ஒருவருக்கு தலா 7 கிலோ வீதம் உணவு தானியங்கள் வழங்கப்படும். இதன் அடிப்படையில், ஒரு நபர் உள்ள குடும்பத்திற்கு 7 கிலோவும், இரண்டு நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 14 கிலோவும், நான்கு நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 28 கிலோவும் வழங்கப்படும். குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருந்தாலும், அதிகபட்ச வரம்பாக ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ மட்டுமே வழங்கப்படும் என இந்த புதிய திட்டத்தில் மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய அளவு குறைக்கப்படும் இந்த திட்டத்தின்படி, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்திற்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் 99 லட்சம் டன் உணவு தானிய அளவு குறைக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நபர் வாரியாகக் கணக்கிடும்போது, 5 நபர்களுக்கும் அதிகமாக இருந்தால் அதை அதிகரித்துத் தர வேண்டும். ஆனால், அதற்கு மாறாக உச்சவரம்பை 35 கிலோ என்று வைத்துக்கொண்டு, மற்றபடி அளவைக் குறைப்பது என்பது மிகவும் வறுமையிலும், ஆதரவற்ற நிலையிலும் இருக்கக்கூடிய தனிநபர்கள் அல்லது வறுமையில் உழலும் குடும்பங்களை வெகுவாகப் பாதிக்கும். 18,64,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் இதன் மூலமாக தமிழகத்தில் மட்டும் அந்தியோதயா அன்னயோஜனா அட்டை வைத்திருக்கும் 18,64,000 குடும்பங்களும், சுமார் 70 லட்சம் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதுபோன்று அனைத்து மாநிலங்களுமே பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. 2011-12-க்கு பிறகு தனிநபர் உணவு நுகர்வு குறித்த கணக்கீடுகள் நடத்தப்படவில்லை. விலைவாசி நுகர்வு குறியீட்டு எண்ணை மாற்றி அமைப்பதற்காக 2023-24 ஆம் ஆண்டில் தான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதே இந்த கணக்கெடுப்பு தொழிலாளர்களையும், அரசிடமிருந்து இலவசமாக உணவு பெறும் குடும்பங்களையும் பாதிக்கும் என்று சொல்லப்பட்டது; இப்போது அது உண்மையாகியிருக்கிறது. கொடூரமான செயலாகும் இந்தியாவில் பன்முக வறுமை விகிதம் 16.96 சதவிகிதமாக உள்ளது. இந்நிலையில், உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் அமலுக்கு வருமானால், நிச்சயமாக பல மாநிலங்களில் பன்முக வறுமை நிலை விகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபத்தில் உச்சவரம்பு வைக்காத பா.ஜ.க. அரசு, ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களின் சாப்பாட்டு தட்டில் இருக்கும் உணவுக்கு உச்சவரம்பு விதிப்பது கொடூரமான செயலாகும். உடனடியாக கைவிட வேண்டும் மத்திய பா.ஜ.க. அரசு, உணவுப் பாதுகாப்பு திருத்த சட்ட வரைவில் உத்தேசித்துள்ள இந்த திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், நடைமுறையில் உள்ளபடி குடும்ப அட்டைக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்குவது தொடர வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-abandon-the-decision-to-amend-the-food-security-act-cpim-urges




