மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, டாக்டர்.சீனிவாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது “மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் எந்த வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுத்து விடாமல் ஒருமித்த கருத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாக நடத்திட வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆனால் எங்களை எந்த ஒரு செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல் அரசியல் தலையீட்டினால் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக சில செயல்களை செய்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு மீண்டும் கோவிலை தொண்மை மாறாமல் புனரமைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அதனை தொடங்கி வைத்த சில மாதங்களில் அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உடல் நலிவுற்று மறைவுற்றார். அதன் பிறகு அறங்காவலர் குழு தலைவராக நானும், மற்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்று கொண்ட பிறகு சவாலான இப்பணியை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாகவே செய்து வந்தோம். அதிலும் வீர வசந்தராயர் மண்டபம் தூண்கள் அமைக்கும் பணிக்கான கற்களை தேடி பல மாநிலங்களுக்கு அலைந்து கடைசியில் இறுதியில் இறைவன் அருளால் தமிழ்நாட்டிலேயே கோவிலுக்கு ஏற்றாற் போலா பிரத்தியேகமான கற்கள் கிடைத்து வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் அழைப்பிதழில் எங்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டு பின்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது பேசுபொருளானது. ஆனால் விழா சீரும் சிறப்பாக நடைபெற வேண்டிய இந்நேரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை தாண்டி முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி வெளியிடப்பட்டுள்ளதா என்பது கேள்விக் குறியாக உள்ளது. அனுமதி அட்டைகள் (பாஸ்) பொறுத்தவரை 9000 எனவும், 11000 எனவும் தினமும் ஒரு கணக்கு வெளிவருகிறது. அதிலும் நன்கொடைதாரர் மற்றும் உபயதாரர்களை அழைக்கபட்டுள்ளார்களா என இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. யாரெல்லாம் விடுபட்டுவிடக் கூடாது என நாங்கள் தயாரித்த பட்டியலையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. மீனாட்சியம்மன் கோயில் இன்று நேற்றல்ல, 1963ஆம் ஆண்டு காலஞ்சென்ற பிடி ராஜன் தலைமையில் இத்திருக்கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்று, மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழிவந்த எங்களின் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும், ஆன்மீகத்தையும் நாங்கள் இணைத்து பார்த்ததில்லை. ஆன்மீக திருப்பணிகள் எவ்வளவு தூரம் சீரும் சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்தாக இருப்பதோடு அரசியல் இதில் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/political-interference-in-meenakshi-amman-temple-consecration-board-of-trustees-chairperson-rukmini-alleges




