சென்னை, இந்தியக் கடலோரக் காவல் படைத் தலைவர் பரமேஷ் சிவமணி சென்னையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்தித்தார். இது தொடர்பாக இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம், பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- முதல்-அமைச்சரிடம் விளக்கம் இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி ஆகஸ்ட் 25 (நேற்று) அன்று சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜயை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, கடல்சார் நலன்கள், மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR), சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளைத் தடுத்தல், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையின் முன்னாள் பணியாளர்களின் நலன் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. கடல்சார் அவசரநிலைகளின் போது கடலில் தத்தளிப்போர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க, மீன்பிடிப் படகுகளில் 'அபாய எச்சரிக்கை ஒலிபரப்பிகள்' (Distress Alert Transmitters) மற்றும் கட்டாய உயிர் காக்கும் உபகரணங்களை அமைப்பதன் முக்கியத்துவத்தை கடலோரக் காவல் படைத் தலைமை இயக்குநர் வலியுறுத்தினார். மேலும், சமீபத்திய புயல் காலங்களில் உயிரிழப்புகள் ஏதுமின்றிப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இயற்கை பேரிடர்களுக்குப் பிந்தைய சூழலில் மாநில நிர்வாகத்திற்கு உதவுதல் போன்ற இந்தியக் கடலோரக் காவல் படையின் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்; அத்துடன், தமிழக மீனவர்கள் உட்படப் பலரின் உயிர்களைக் காப்பாற்றிய வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சரிடம் விளக்கினார். பரஸ்பர அர்ப்பணிப்பு தமிழ்நாடு காவல்துறை, மாநில கடலோரக் காவல் பிரிவு (Marine Police), மீன்வளத் துறை மற்றும் மாநிலத்தின் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், உறுதியான கடலோரப் பாதுகாப்பைத் தொடர்ந்து பராமரிப்பதில் இந்தியக் கடலோரக் காவல் படை கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் தலைமை இயக்குநர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பிராந்திய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையிலான பரஸ்பர அர்ப்பணிப்பை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-coast-guard-chief-meets-chief-minister-vijay



