சென்னை, நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும்,மீண்டும் உயர்த்த கூடாது: மாநில நிதி ஆணைய பரிந்துரையை ஏற்க கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சொத்துவரி உயர்வு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஏழாம் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருக்கும் போது, மீண்டும், மீண்டும் மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வையே அனைத்து அரசுகளும் கையில் எடுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. நிதிநிலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரி உயர்வு, வரி அல்லாத வரிவாயை அதிகரித்தல் உள்ளிட்ட மூன்று அம்சங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார். அவருடன் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ''உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாயை அதிகரிக்க, சொத்து வரி உள்ளிட்டவைகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அடிப்படை வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் நிதி தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்; அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை பெருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக மீண்டும், மீண்டும் சொத்துவரியை உயர்த்தி அதன் மூலம் மக்களைச்சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏப்ரல் மாதம் முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் சுமையையே மக்களால் தாங்க முடியாத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை 6% சொத்து வரி உயர்த்தும் முறை கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. நிலைமை மாறவில்லை தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை. சென்னையில் சில மாதங்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 மடங்கு வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த முடிவை தவெக அரசு கைவிட்டது. இத்தகைய சூழலில் மீண்டும் சொத்துவரி உயர்த்தப்படுவதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. நிதிப்பகிர்வு மாநில அரசின் வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்கை முறையாக பகிர்ந்தளித்தாலே அவை சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான நிதி கிடைக்கும். ஆனால், மாநில அரசுகள் அதை செய்ய முன்வருவதில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் மத்திய அரசு எத்தகைய மேலாதிக்க அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ, அதே அணுகுமுறையைத் தான் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வில் மாநில அரசும் கடைபிடிக்கிறது. அரசியல் ஆதாயம் உள்ளாட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதற்காக உள்ள பல வரிகளை அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் ரத்து செய்யும் மாநில அரசு, அதனால் ஏற்படும் இழப்புகளை சொத்துவரி உயர்வு மூலம் ஈடுகட்ட விரும்புவது நியாயமல்ல. வருவாய் ஆதாரங்கள் எனவே, உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களை பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/property-tax-should-not-be-raised-again-in-urban-areas-anbumani-ramadoss




