சென்னை: தமிழ்நாட்டில் 4-ல் 3 பங்கு மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதால், 2027-ம் ஆண்டு பொங்கல் திருநாளில் 4 முழ வேட்டி வழங்கப்படும் என்று கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார். சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின், பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவை 8 முழத்தில் இருந்து 4 முழமாக குறைத்திருப்பதால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜய் பாலாஜி கூறியதாவது:- தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில், பல ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுவதாகவும், இந்த முறை புதிய வடிவமைப்பில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன. 4 முழ வேட்டி, ஜரிகை தைத்த சேலை இதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் துறைச் செயலாளர்கள் மற்றும் சரக அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியே விருப்பம் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில்தான் 4 முழ வேட்டியும், ஜரிகை தைத்த சேலையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகளில் தொடர் வேலைவாய்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளையும் அரசு கொள்முதல் செய்யும். நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அரசு வழங்கிய மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகளும் முழுமையாக கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-provide-dhoti-and-saree-in-new-design-minister-vijay-balaji-explains




